வாஷிங்டன்: ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், சீனா ஆக்கப்பூர்வமான பங்காற்ற வேண்டுமென இந்திய வம்சாவளி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் அமி பேரா தெரிவித்துள்ளார்.

மேற்பார்வை மற்றும் விசாரணைகளுக்கான வெளிநாட்டு விவகாரங்கள் துணை கமிட்டியின் தலைவராக இருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் அமி பேரா.

இவர் கூறியுள்ளதாவது, “ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் வகையில், தனது ஆக்கப்பூர்வ பங்கை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீனா ஆற்ற வேண்டும்.

தன் நாட்டில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும். தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, அமெரிக்க காங்கிரஸ் சபை கட்டாயம் துணை நிற்கும். இதன்மூலம் அந்நாட்டின் பொருளாதாரம் மேம்படும்” என்றார்.

– மதுரை மாயாண்டி