வாஷிங்டன்

மெரிக்க அதிபரின் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒரு குழப்பமான பேரிடர் மேலாண்மையாக உள்ளதாக முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கூறி உள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல உலக நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.   இதில் அமெரிக்காவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதுவரை அமெரிக்காவில் 13.47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதில் 80037 பேர் உயிர் இழந்துள்ளனர்..  இதுவரை சுமார் 2.38 லட்சம் பேர் மட்டுமே குணம் அடைந்துள்ளனர்.

இதனால் அமெரிக்காவில் பலமாகாணங்களில் மார்ச்சில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது    ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பலர் பணிக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    அதே வேளையில் சுகாதார அதிகாரிகள் ஊரடங்கு தளர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா பரவுதல் மேலும் தீவிரமாகும் என எச்சரித்துள்ளனர்.   அரசு அதில் கவனம் கொள்ளவில்லை.

அதிபர் டிரம்ப் கொரோனா குறித்த கருத்துக்களை மாறி மாறி கூறி வருவதும் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.   பிப்ரவரி மாதம் கொரோனா ஒரு அச்சுறுத்தல் கிடையாது எனவும் அது விரைவில் மறைந்து விடும் எனவும் தெரிவித்தார்,   ஆனால் மார்ச் மாத நடுவில் கொரோனா பாதிப்பின் தீவிரத்தை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஏப்ரல் மாதம் அவர் கொரோனாவை தடுக்க கிருமி நாசினியை ஊசி மூலம் செலுத்தலாம் எனத் தெரிவித்து  மருத்துவ நிபுணர்கள் எதிர்ப்புக்குப் பிறகு அது வெறும் நகைச்சுவைக்காகச் சொன்னது எனச் சமாளித்தார்.  கடந்த வாரம் கொரோனா எதிர்ப்பு படையை கலைக்கப் போவதாகத் தெரிவித்த டிரம்ப் அதன் பிறகு பொருளாதார மேம்பாட்டுக்காக அவ்வாறு சொன்னதாகத் தெரிவித்தார்.

இது குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஒபாமா, “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவின் போக்கு மிகவும் மோசமாக உள்ளது.   இதற்கு அதிபர் வரம்பின் நடவடிக்கைகளும் ஒரு காரணமாக உள்ளது.  இதனால் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் நான் ஜோ பிடனுக்கு ஆதரவு தெரிவிக்க எண்ணுகிறேன்.

ஒரு நல்ல அரசையும் மோசமாக மாற்றும் அளவுக்கு டிரம்ப்பின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.  இந்த நடவடிக்கைகளை ஒரு குழப்பமான பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் எனவே கூறலாம்.  இந்த குழப்பங்களை மறைக்க அதிபர் டிரம்ப் வேறு பல நடவடிக்கைகள் எடுத்து மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார்,” என் தெரிவித்துள்ளார்.