வாஷிங்டன்

ந்தியாவில் பிற மதங்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் கண்காணிப்பு பிரிவான சர்வதேச மதச்சுதந்திர அமெரிக்க ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள சர்வதேச மதச் சுதந்திர அமெரிக்க ஆணையம் என்னும் அரசு அமைப்பு உலகெங்கும் மதச் சுதந்திரம் மீறல் குறித்த புகார்களை ஆய்வு செய்து அறிக்கை விடுத்து வருகிறது.   அந்த அறிக்கையின் அடிப்படையில் அமெரிக்க அரசு மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் என ஒரு பட்டியல் தயாரித்து வருகிறது.  அந்த அமைப்பு இந்தியாவில் மத உரிமைகள் மீறும் நிலையில் உள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு,  ”இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு தற்போது அது சட்டமாகி உள்ளது.  இதன் மூலம் இந்தியாவின் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதக் கலவரத்தால் இந்தியா வந்துள்ள இஸ்லாமியர் அல்லாதோருக்குக் குடியுரிமை வழங்க உள்ளது.

இது இந்திய அரசின் மத சுதந்திர மீறலை வெளியே காட்டுகிறது.   இந்த சட்டத்தின்படி பல லட்சம் இஸ்லாமியர்கள் நாடு இழந்தவர்களாகி இந்தியாவை விட்டு வெளியேற்றப்படும் சூழ்நிலை ஏற்படும்.   இந்தியா தற்போது மதச் சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் இல்லை.  ஆனால் கடந்த 2004க்கு பிறகு முதல் முறையாக இந்த ஆணையம் இந்தியாவை அந்த பட்டியலில் சேர்க்கலாம் என பரிந்துரைக்கிறது. ” என அறிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் சூடான மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன  சூடான் நாட்டில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முன்னாள் ஜனாதிபதி உமர் அல் பஷிர் நீக்கப்பட்டதில் இருந்து இஸ்லாமியச் சட்டங்கள் பின்பற்றப்படுவதில்லை எனவும் இதனால் மத சுதந்திரம் மற்றும் வணங்கும் உரிமை ஆகியவை மீறப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டிலும் மத சுதந்திரத்துக்கு எதிரான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.   கடந்த ஆகஸ்ட் மாதம் உஸ்பெகிஸ்தானில் உள்ள ஜோஸ்லிக் சிறையில் மதம் சம்பந்தப்பட்ட இரு கைதிகள் உயிருடன் கொதிக்கும் நீரில் தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை அரசு ரத்து செய்ததை ஆணையம் சுட்டிக் காட்டி உள்ளது

அத்துடன் ஏற்கனவே மத உரிமைகளை மீறிய நாடுகள் பட்டியலில் உள்ள நாடுகளான பர்மா, சீனா, எரிடிரியா, ஈரான், வட கொரியா, பாகிஸ்தான், சவுதி அரேபிய, தாஜிகிஸ்தான், மற்றும் துருக்மேனிஸ்தான் ஆகிய நாடுகளைப் பட்டியலை விட்டு நீக்க வேண்டாம் எனவும் பரிந்துரை செய்துள்ளது.  இந்தியாவைப் போல் நைஜீரியா, ரஷ்யா, சிரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைப் பட்டியலில் சேர்க்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி : newpakweb.com