அகமதாபாத்:

மெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலினாவுடன் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். அப்போது, குஜராத் வருகை தரும் அவர் சபர்மதி ஆசிரமத் உள்பட பல்வேறு பகுதிகளை பார்வையிடுகிறார். இதற்கான பல்வேறு ஏற்பாடுகளை செய்து வரும் குஜராத் மாநில பாஜக அரசு,  அவர்கள் வரும் பாதையை  ரூ.3.7 கோடி மதிப்பிலான மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, டிரம்ப் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், டிரம்ப் தனது மனைவி மெலினாவுடன் வரும் 24 மற்றும் 25 ஆம் தேதி இந்தியா வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் டெல்லி மற்றும் அகமதாபாத் நகரில்  நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதுதொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இவ்வாரம் டெல்லிக்கு வந்து ட்ரம்பின் பயணத்துக்கு தேவையான ஏற்பாடுகள் செய்ய இருப்பதாகத் தெரிகிறது.

அமெரிக்கா வரும் டிரம்ப் மற்றும் அவரது மனைவியை வரவேற்கும் வகையால் அகமதாபாத் பாதைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  இதற்காக ரூ .3.7 கோடி மதிப்பிலான மதிப்புள்ள மலர்கள் பயன்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி அகமதாபாத், சிம்மன்பாய் படேல் பாலம் முதல் ஜுண்டால் வட்டம் மற்றும் மோட்டேரா வரை உள்ள சாலைகளை அழகுபடுத்துவதற்காக ரூ .3.7 கோடி மதிப்புள்ள பூக்களை வைத்திருக்க அகமதாபாத் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சாலைகளை அழகுபடுத்துவதற்கான இரண்டு திட்டங்களுக்கு நிலைக்குழு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

சிமன்பாய் படேல் பாலம் முதல் மோட்டேரா மைதானம் வரை ரூ .1.73 கோடி செலவிலும், சிமன்பாய் படேல் பாலம் முதல் ஜுண்டால் வட்டம் வரை நீட்டிக்க 1.97 கோடி ரூபாய் செலவிலும் மலர் அலங்காரம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிகாரிகள், அங்குள்ள  மெட்ரோ வழித்தடத்தின் கீழ் பசுமையான இடங்களை உருவாக்கு வதற்கான திட்டம் உள்ளது என்று கூறி உள்ளனர். அத்துடன் அந்த பகுதியில்,  போதுமான வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் வழியிலுள்ள விளக்குகள் தீம் சார்ந்த விளக்குகளாக மாற்றப்படும் என்றும், அந்த பகுதிகளில்  சிறுநீர் கழிக்க தேவையான வசதிகள் செய்யவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, டிரம்பின் கண்ணில் இருந்து குடிசை பகுதிகளை மறைக்கும் வகையில், அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் சார்பில் காந்தி நகரில் இருந்து அகமதாபாத் வரை 500 முதல் 600 மீட்டர் தூரத்திற்கு 6 முதல் 8 அடி உயரம் வரை  சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவர்கள் வரும் பாதை மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.