வாஷிங்டன்:

சீன லேப்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதா? என்று அமெரிக்கா விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ், உயிரியல் ஆய்வகத்துடன் தொடர்புடையது என்பதை அமெரிக்கா நம்பவில்லை. வைரஸ் குறித்து பலவிதமான கோட்பாடுகளை அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது.

இந்த விவகாரம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் , எதிர்பாராதவிதமாக மனிதர்களிடம் பரவியதா என உளவுத்துறையினர் விசாரிக்கின்றனர். அதே நேரத்தில், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனாவை சரியாக கையாளாத காரணத்தினால், அங்கு பணிபுரிந்தவருக்கு கொரோனா பாதித்து அவர் மூலம் மற்றவர்களுக்கு பரவியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து உளவுத்துறை விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்க முப்படை தளபதி மார்க் மில்லே கூறியுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவிக்கையில், நாட்டில் மோசமான சூழ்நிலை ஏற்பட காரணமான வைரஸ் குறித்து அமெரிக்கா தீவிர ஆய்வு செய்வதாக கூறிய அவர் விரிவாக தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பு வெளியிட்ட அறிக்கையில், வைரசால் நோய் ஏற்படும் போதும், அது மனிதர்களால் பரப்பப்பட்டது அல்லது ஆய்வகத்தில் இருந்து வெளியேறியதாக புகார்கள் வருகின்றன. கொரோனா வைரசை , சீன அதிகாரிகள் கையாண்ட விதம் கண்டிக்கத்தக்கது. அந்த வைரஸ் எப்படி உண்டானது என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட பாதிப்பிற்கு சீனா பதில் சொல்லியாக வேண்டும். அதேநேரத்தில், இந்த தொற்றுக்கு கட்டுக்குள் வரும் வரையிலும், அதற்கு ஒரு வழி உண்டாகும் வரை அமெரிக்கா கவனமுடன் செயல்பட வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.