வாஷிங்டன்: ரஷ்யாவுடன் கடந்த 1987ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஐஎன்எஃப் ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டுவிட்டது அமெரிக்கா.

தனது நாட்டின் பாதுகாப்பிற்கான நடவடிக்கை முன்னெடுப்புகளை இந்த ஒப்பந்தம் தடுப்பதால், அதிலிருந்து விலக முடிவெடுத்ததாக கூறியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் – முன்னாள் ரஷ்ய அதிபர் கோர்பசேவ் ஆகியோருக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தம் இது. சுமார் 500 முதல் 5500 கி.மீ தூரம் வரையில் பாயத்தக்க தரையிலிருந்து ஏவப்படும் அணு ஏவுகணைகள் மற்றும் நடுத்தர தொலைவுக்கு பாயக்கூடிய ஏவுகணைகளை ஐரோப்பாவிலிருந்து அகற்றுவதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

ஆனால், இந்த ஒப்பந்தம் ரஷ்யாவால் தொடர்ந்து மீறப்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறது அமெரிக்கா. ரெம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவு, ரஷ்யா மற்றும் அமெரிக்க கூட்டணி நாடுகளிடையே புதிய ஆயுதப் போட்டி ஏற்பட வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்யா, ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முன்னதாக தனக்கு எந்தவொரு தகவலையும் அமெரிக்கா அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. மேலும், தானும் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.