ஆண்டிகுவா: உலகப் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆடையை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

14வது ஐபிஎல் சீசன் நாளை தொடங்கவுள்ளது. போட்டிகளுக்கு ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் தடகள வீரர் உசைன் போல்ட்டின் பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆடையை அணிந்துகொண்டு உசைன் போல்ட் தனது ட்விட்டர் பக்கத்தில், “சேலஞ்சர்ஸ்… நான் உங்களுக்கு ஒன்றைத் தெரியப்படுத்துகிறேன். நான் இன்னும் வேகமான பூனைதான்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு ஆர்சிபி அணியினர் பதிலளித்துள்ளனர். அந்த அணியின் கேப்டன் கோலி, “எங்களுக்குத் தெரியும். அதனால்தான் எங்கள் அணியில் நீங்கள் இருக்கிறீர்கள்” என்றும் பதிவிட்டிருந்தார்.

அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ், “சில கூடுதல் ரன்கள் தேவைப்படும்போது யாரை அழைப்பது என்பது எங்களுக்குத் தெரியும்!” என்று பதிலளித்தார்.