சென்னை:
சொன்னா கேட்குறதில்ல – சரியான ‘வாபஸ்’ பழனிசாமி” பிளஸ்1, பிளஸ்2 பாடத் தொகுப்பு ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

11 மற்றும் 12-ம் வகுப்பில் அறிமுகம் செய்யவிருந்த புதிய பாடத் தொகுப்பு முறையை ரத்து செய்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
இதுகுறித்து திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
11 மற்றும் 12-ம் வகுப்பில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் 6 பாடத் தொகுப்பும், கூடுதலாக 5 பாடத் தொகுப்பும் அறிமுகப்படுத்தப்பட இருந்தது. இதில், 5 பாடங்கள் அடங்கிய தொகுப்பில் சேர்ந்தால், உயர்கல்வியில் பாதிப்பு ஏற்படும் என்று கல்வியாளர்களும், பெற்றோரும், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து, புதிதாக அறிவிக்கப்பட்ட தொகுப்பு பாடத் திட்டத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.
புதிய பாடத் தொகுப்பு முறை அறிவிக்கப்பட்ட முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அத்திட்டம் ரத்து செய்ததை வரவேற்றுள்ளார்.
அதுகுறித்து தனது, டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது ” குளறுபடியான புதிய பாடத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் என நான் கோரி இருந்தேன். இப்போதாவது அதனை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறேன்.
முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டுப் பின்னர் திரும்பப் பெறுவது இந்த அரசின் வழக்கமாகிவிட்டது! இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் இத்தனை அலட்சியமா? சரியான ‘வாபஸ்’ பழனிசாமி!”
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.