சென்னை: நாடு முழுவதும 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோய்களுடன் இருக்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இன்றுமுதல் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம்  தொடங்கி உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் முதலகட்ட தடுப்பூசி போடும்பணி ஜனவரி 16ந்தேதி தொடங்கியது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வந்து. அவர்களில் பலருக்கு 2வது டோஸ் தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 2வது கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோய்களுடன் இருக்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம்  இன்று தொடங்கி உள்ளது.

அதற்கான நடைமுறைகள் என்ன என்பது வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி,  இன்றுமுதல் புதியதாக தடுப்பூசி போடும் நபர்கள்,  வயது சான்றுக்காக ஆதார் அட்டை, ஓய்வூதிய அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வர வேண்டும்.  எந்த தடுப்பூசி மையத்துக்கும் சென்று  தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கோவின் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இரண்டாவது டோஸ் குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும்.

அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும்,  தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் கொடுத்தும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 761 தனியார் மருத்துவமனைகளிலும் 529 அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.