கோவில்பட்டி:

யிர்கொல்லி நோய்களை தோற்றுவிக்கும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று தனது வாகன பிரசாரத்தை தொடங்குகிறார்.

இந்த வாகன பிரசாரத்தின்போது,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் புகை மற்றும் கழி நீர் காரணமாக  பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், ஆலையின் அத்துமீறல்கள் குறித்தும், ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  மதிமுக பொது செயலாளர் வைகோ வாகன பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

5 நாட்கள் நடைபெற உள்ள இந்த வாகன பிரசாரம் இன்று  மாலை 4 மணிக்கு கோவில்பட்டியில் தனது முதல் உரையை தொடங்கி வாகன பிரசார பயணத்தை மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், சூரங்குடி, வைப்பார் வழியாக குளத்தூர் சென்று முதல் நாள் பிரச்சார பயணத்தை முடித்துக் கொள்கிறார்.

நாளை 18ம் தேதி புதன் அன்று மாலை 4 மணிக்கு கரிசல் குளம் கிராமத்தில் பிரச்சார பயணத்தை தொடங்கும் வைகோ, காமநாயக்கன்பட்டி, பசுவந்தனை, ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர் வழியாகச் சென்று குறுக்குச் சாலையில் இரண்டாம் நாள் பயணத்தை நிறைவு செய்கிறார்.

அதைத்தொடர்ந்து 21ம் தேதி அன்று நெல்லை அருகே உள்ள  செய்துங்கநல்லூரில் தொடங்கி,  ஆழ்வார் திருநகரி, நாசரேத், பேய்குளம், சாத்தான்குளம் வழியாக மெய்ஞானபுரம் சென்று  உடன்குடியில்  பயணத்தை  முடிக்கிறார்.

22 ம் தேதி மாலை 4 மணிக்கு திருவைகுண்டம் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கி ஏரல், ஆத்தூர், காயல்பட்டினம், திருச்செந்தூர் மணப்பாடு வழியாக சென்று பெரியதாழை பகுதியில் பிரச்சாரத்தை முடிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து 28 ஆம் தேதி மாலை தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்புகள் குறித்தும், ஆலையின் அத்துமீறல்கள் பற்றியும் பேச உள்ளார்.