திருச்சி, மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து 66 மணி நேரத்தைக் கடந்துள்ளது. அவரைப் பத்திரமாக மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தொடர்ச்சியாக #PrayforSurjith, #PrayforSujith, #PrayforSurjit ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகின்றன.

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில், “குழாயில் வீழ்ந்த குழந்தையை மீட்க நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்திக் கண்ணீரோடு கைதட்டுகிறேன். அரசு இயந்திரத்தையோ, ஆழ்துளை இயந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை. குழந்தை மீட்பே குறிக்கோள். பாறை என்பது நல்வாய்ப்பு; மண் சரியாது. தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.