சென்னை:

ஒரு பாடலுக்கு ரூ.10 லட்சம் தருவதாக இயக்குனர் சீனு ராமசாமி கூறியும், தர மறுத்துவிட்டார் கவிஞர் வைரமுத்து.


இரா.சுப்பிரமணயன் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் மற்றும் சீமான் நடிப்பில் அமீரா என்ற படம் உருவாகவுள்ளது.
திருடன் ஒருவன் ஓர் அழகான பெண்ணால் மாறுகிறான். அவனை மாற்ற அவள் என்னவெல்லாம் செய்தால் என்பதுதான் பாட்டு.

15 நிமிடங்கள் எழுதிய பாட்டை இயக்குனர் சீனு ராமசாமிக்கு பாடிக் காட்டியுள்ளார் கவிஞர் வைரமுத்து.

தான் எடுத்து வரும் படத்துக்கு இந்த பாடல் பொருத்தமாக இருக்கும். கொடுத்துவிடுங்கள். ரூ.10 லட்சம் வாங்கித் தருகிறேன் என வைரமுத்துவிடம் கூறினார்.

அதனை ஏற்க வைரமுத்து மறுத்துவிட்டார். இது சீமானுக்காக எழுதிய பாடல். தரமாட்டேன் என்று மறுத்துவிட்டதாக பட நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடல் வரிகள் இதோ..

ஆதார் அட்டையிலும்
அழகானவள்
அழுகின்ற வேளையிலும்
அழகானவள்

ஆடை சூடியும்
அழகானவள்
அதனைத் தாண்டியும்
அழகானவள்

பேசும்போதும் அழகானவள்-நீ
பேசாத போது பேரழகானவள்
நெற்றி சரியும்
கற்றை முடியைச்
சுட்டு விரலால்
சுற்றும் போது
சுழற்றியடிக்கும் புயலானவள்

பத்து கிராம் புன்னகையில்
பைத்தியமாய் ஆனேன்
பூப்பறிக்கும் உயரம் கண்டு
புத்திமாறிப் போனேன்
ஓடைப்பார்வை தீண்டிச் செல்ல
அரசனாகிப் போனேன்

சாயம்போன வாழ்வோடு
நிறமூட்டினாய்
ஈயம்போன பாத்திரத்தில்
ஒளியேற்றினாய்
அழகென்ற பொருள்கொண்டு
அன்பென்ற வழிகண்டு
திருடுகின்ற என்வாழ்வைத்
திருவாக்கினாய்.