மார்ச்,1969.. மும்பையில் முதன் முறையாக ஒரு பெண் இசைக்கச்சேரி செய்கிறார்..அந்த நிகழ்ச்சிக்கு எதேச்சையாக வருகிறார் வசந்த் தேசாய்..1940களிலும் 50களிலும் பட்டையை கிளப்பிய இசைமேதை..

1959ல் கூன்ஜ் உதி ஷெனாய் என்றொரு படம்.. நம்மூர் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி எப்படி எம்.பி.என். சகோதரர்களின் நாதஸ்வர இசையை திரையில் தத்ரூபமாக காட்டி இசைக்கலைஞராக வியக்க வைத்தாரோ அதேபோல் ஷெனாய் வாத்திய கலைஞராக  ஜுப்ளி ஸ்டார் ராஜேந்திரகுமார் நடித்திருப்பார்..மன்னிக்கவும் வாழ்ந்து காட்டியிருப்பார்..

ஏனெனில் படத்திற்காக ஷெனாய் வாசித்தது புகழ்பெற்ற உஸ்தாத் பிஸ்மில்லா கான்.. பாரத ரத்னா பட்டியலில் இடம்பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் அப்படியொரு இசைப்பொக்கிஷம் பிஸ்மில்லா கான்.. இப்படியெல்லாம் பல வரலாறு கொண்ட கூன்ஜ் உதி ஷெனாய் படத்துக்கு இசையமைத்தவர்தான் வசந்த் தேசாய்..

எம்ஜிஆர் தனது திரையுல மானசீக குருக்களில் ஒருவராய் பெரிதும் போற்றிய நடிகர் இயக்குர் தயாரிப்பாளர் கதாசிரியர் என பன்முகம் கொண்ட ஜாம்பவான் வி. சாந்தாராமுக்கு பெரும் புகழை தேடித்தந்த படங்களெல்லாம் இந்த வசந்த் தேசாய்தான் இசை..

இப்படிப்பட்டவர்தான் அன்றைய இளம் பெண்ணின் கச்சேரியை கேட்க நேரிட்டது.. மனுஷன் ஆடிப்போய்விட்டார். குரலா இது என்று வியந்து வியந்து. தான் இசையமைத்த Guddi படத்தில் பாட உடனே வாய்ப்பு கொடுத்தார்.. அதுவும் எப்படி? படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களையும் பாடும் அளவுக்கு.

1971 Guddi படம் வெளியானது.. போலேரே பப்பிஹரா என்று கதாநாயகி பாடும் ஒரு பாட்டு..திரையில் பாடியவர் ஜெயா பாதுரி என்ற பெண்.. கதாநாயகியாக அறிமுகம்.. பின்னாளில் அமிதாப்பச்சனை மணந்து ஜெயா பச்சனாக மாறியவர்.

போலேரே பப்பிஹரா பாடல் அப்படியொரு ஹிட்டு..படத்தையும் சேர்த்தே அந்த பாடல் அப்படியே மேலே தூக்கிக்கொண்டுபோய் வசூலை வாரிக்குவித்தது.. இந்த படத்தைதான் நமது இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ஜெய்சங்கர் கமல், ஜெயசித்ரா ஆகியோரை வைத்து ‘சினிமா பைத்தியம்’ என தமிழில் ரீமேக் செய்தார்

முதல் படத்திலேயே இப்படி சாதனை படைத்த அந்த குரலுக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல, நம்ம இசைமேதை பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்கள்தான்..

லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே என்ற சகோதரிகள் குரல் வளத்தால் சாம்ராஜ்யம் நடத்திவந்த இந்திய திரையுலகை வாணி ஜெயராமின் குரலும் இணையாக தாலாட்ட ஆரம்பித்தது..

இந்தி திரையுலகில் புகழ்பெற்ற முன்னணி இசையமைப்பாளர்கள் அத்தனை பேரின் இசையிலும் வாணி ஜெயராம் குரல் ஒலிக்கத்தவறவேயில்லை.. முகமது ரஃபி, கிஷோர் குமார் உட்பட அத்தனை பின்னணி ஜாம்பவான்களின் குரலோடும் வாணியின் குரல் சேர்ந்து அதகளம் செய்தது

சாஸ்திரிய சங்கீத கச்சேரிகளுக்காக அடிக்கடி சென்னை வந்துபோக வேண்டியிருந்ததால் 1974ல் சென்னைக்கே இடம் பெயர்ந்தார் வாணி.

இங்கே சுசீலாவும் எஸ்.ஜானகியும் கொடிகட்டிப்பறந்த நேரம்.. எம்எஸ்வி விஸ்வநாதன் புண்ணியத்தில் தமிழிலும் வாணி வெற்றிக்கொடி ஏற்ற ஆரம்பித்தார்..

தீர்க்க சுமங்கலி படத்தில் வாணி ஜெயராம் பாடிய ‘’மல்லிகை என் மன்னன் மயங்கும்’’ பாட்டு எப்படிப்பட்ட ஹிட் என்பதையெல்லாம் சொல்லித் தெரியத்தான் வேண்டுமா? தங்கப்பகத்த்தில் பாடிய, தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு பாடலும் இதே ரகம்தான்..

1975ல் ரஜினி அறிமுகமான அபூர்வ ராகங்கள் வாணி பாடிய ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் பாடல் இசைக்கலைஞர்களே உருகவைத்த அளவுக்கு எவ்வளவு ஏற்ற இறக்கம் குரல் வளத்தில்

மற்றவர்கள் எளிதில் பின்பற்றி பாடமுடியாத அளவுக்கு குரல்வளமும், ஏற்ற இறக்கங்களை காட்டுவதில் அசாத்திய திறமையும் வாய்ப்பது என்பது அபூர்வ ரகம்..

மேடைப்பாட்டு கச்சேரிகளில் பாடுபவர்கள், இப்படிப்பட்ட அபூர்வ ராக குரலை எட்டிப்பிடிக்க கடுமையாக போராடவேண்டி வரும். முகபாவனைகளை எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு மாற்றி மாற்றி மாற்றினால்தான் வாணியின் பாடலை கொஞ்சமாவது தேற்ற முடியும்… நாம் கீழே சாம்பிளுக்காக போடும் பாடல்களெல்லாம் இப்படிப்பட்ட ரகத்தை சேர்ந்தவைதான்

பாடலை கேட்கும்போது இனிமையாக இருக்கும்.. அதே பாடலை இன்னொருவர் பாட கேட்கும்போதுதான் வாணி ஜெயராமின் தனித்துவமே தெரியும்.. அந்த அபூர்வ ராகம்தான் பாடகி வாணி ஜெயராம்..

அன்பு மேகமே இங்கு ஓடிவா (எங்கம்மா சபதம்), என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்.. (அழகே உன்னை ஆராதிக்கிறேன்), அமுதோ தமிழில் எழுதும் ( மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்) ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது( இளமை ஊஞ்சலாடுகிறது),மேகமே.. மேகமே பால் நிலா..( பாலைவனச்சோலை)
அதோ வாராண்டி வாரண்டி வில்லேந்தி ஒருத்தன்,.(பொல்லாதவன்) என் உள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன் (ரோசாப்பு ரவிக்கைக்காரி)

வாணி உள்ளிட்ட இசை ராணிகள்..

அடுக்கிக்கொண்டே போகலாம் அந்த இனிமையின் பட்டியலை..

ஹிந்தி, உருது, மராத்தி, குஜராத்தி, ஒரியா, போஜ்புரி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் தமிழ் என நாட்டின் அத்தனை மொழிகளிலும் இசையருவியை பாயவிட்ட அற்புதமான குரலரசி..

பாடலை விளக்கும்போது புரிந்துகொள்வதில் அப்படியொரு கச்சித ஆற்றல் கொண்டவர் என்பதால் இசைஞானி வாணி ஜெயராமை, செல்லமாக அழைப்பது, ‘கம்ப்யூட்டர்’ என்றே

நவம்பர் 30.. வாணி ஜெயராம்..72 வது பிறந்த நாள் இன்று.

 

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்