கணவர் பீட்டர் பாலை பிரிந்துவிட்டதாக வெளியான செய்திக்கு வனிதா விஜயகுமார் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

“நான் ஒரு குடும்பத்தை/வீட்டை உடைத்துவிட்டேன் என்று நினைப்பவர்களுக்கு..
பல வருடங்களாக வீடில்லாத, குடும்பமில்லாத ஒருவருடன் சேர்ந்து நான் ஒரு குடும்பத்தை/வீட்டை உருவாக்கினேன். அவரும் வலியில் இருந்தார், நானும் வலியில் இருந்தேன்.
கொரோனா நெருக்கடி ஆரம்பித்த சமயத்திலிருந்து, வேண்டுமென்றே எங்களைச் சுற்றி ஊடகங்களில் நடந்த கூத்து வரை மோசமான காலகட்டத்தை, ஒருவரை ஒருவர் நேசித்து, சிரித்து, வாழ்ந்து கடந்து வந்தோம். எதுவும் எங்களை வீழ்த்தாது என்று நான் நம்பினேன்.
அடுத்தது ஒரு உடல்நலப் பிரச்சினை வந்தது. ஒரே மாதத்தில், இரண்டு முறை அவரை இழந்துவிடுவேனோ என்று நான் பயந்தேன், உடைந்து போனேன். அது மிக மோசமான உணர்வு, வலி.
இரண்டு முறை அவரை உயிரோடு கொண்டு வந்த இறைவனுக்கு நான் நன்றியுடன் இருந்தேன். அதுவும் இந்த (கொரோனா நெருக்கடி) வருடத்தில். உங்களது அன்பார்ந்தவரின் உடல்நலம் குன்றும்போதோ அல்லது பெரிய உடல் நலப் பிரச்சினையிலிருந்து மீளும் போதோ உங்கள் வாழ்க்கை மாறும்.
தொடர்ந்து அவருக்காக அக்கறை காட்ட வேண்டியது எனது பொறுப்பு. அவரை இழக்கும் வலியை தாங்கும் சக்தி என்னிடம் இல்லை. இன்றும் கூட நான் அதே வலியுடன் தான் இருக்கிறேன்.
சில வக்கிர மனம் படைத்தவர்கள் இன்னும் என் வாழ்க்கையை வைத்து பணமும் புகழும் சம்பாதித்து வருகின்றனர். போதிய அக்கறை காட்டாமல் என் இதயத்தை நொறுக்குகின்றனர். இரண்டு தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கை குறித்து கேலியோ, விவாதிக்கவோ செய்கின்றனர். மற்றவர்களின் வலியில் மகிழ்ச்சியைத் தேடுகின்றனர்.
நான் நேர்மையான பெண். எனது வாழ்க்கையின் அனைத்து நல்ல, கெட்ட விஷயங்களை உலகத்திடம் பகிர்கிறேன். நான் எதையும் மறைப்பதில்லை ஏனென்றால் என்னிடம் மறைக்க எதுவுமில்லை. ஆனால் இதை மற்றவர்கள் அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது சரியல்ல.
நான் எப்போதும் சொல்ல விரும்புவதெல்லாம் இதுதான். இப்போது நான் இன்னொரு பெரிய சவாலை சந்தித்துள்ளேன். அதை எப்படிச் சரி செய்வது என என்னால் முடிந்த அளவு முயற்சித்து வருகிறேன். ஏனென்றால் அதை நான் மாற்றவோ, புறக்கணிக்கவோ முடியாது ஏனென்றால் அது வாழ்வா சாவா என்பது பற்றிய விஷயம்.
நான் அதிக வலியில் இருக்கிறேன். என் இதயம் கனக்கிறது. நான் அதிக பயத்தில் இருக்கிறேன். ஏனென்றால் அன்பு மட்டுமே நான் கேட்டது. அதை இழக்க அச்சமாக இருக்கிறது. எனது வேலையை, குழந்தைகளை தொந்தரவு செய்யாமல் இந்த சவாலை எதிர்கொள்ளும் அளவு துணிச்சலுடன் இருக்கிறேன்.
எனது வாழ்க்கை தொடர் போராட்டமாக இருந்து வந்துள்ளது. இது எனக்குப் புதிதல்ல. காதலில் தோற்பது எனக்குப் பழகிவிட்டது. ஆனால் நான் எப்போதுமே அதைக் கடந்து வந்திருக்கிறேன், இன்னும் வலிமையுடன் வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கிறேன்.
காதலில் இருப்பதும், அதனால் ஏமாற்றமடைவதும் மிக மிக துன்பகரமானது, தாங்க முடியாத வலியைத் தரக்கூடியாது. ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு நமக்கு எல்லாம் மரத்துப் போய்விடும். நம் கண் முன் நம் வாழ்க்கையை இழப்பது மிகுந்த வலியைத் தரும் விஷயம். அதில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அதை கையாளும் நிலையில் நான் இருக்கிறேன்.
இது நடந்திருக்க வேண்டாம் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் வாழ்க்கை ஒரு பாடம். அதை நான் இன்னும் கற்று வருகிறேன். அதை நான் உறுதியுடன் எதிர்கொள்கிறேன். போலியான செய்திகளைப் படித்த எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என உங்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
எந்த கிண்டலுக்கும், அவதூறுக்கும் ஆளாக வேண்டிய அளவு நான் குறைந்து போய்விடவில்லை. ஏனென்றால் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. அன்பு தேவைப்பட்ட ஒருவரிடம் நான் அன்பு செலுத்தினேன்.
என் வாழ்க்கையில் எனக்கிருந்த அத்தனை கனவுகளும் நம்பிக்கையும் நொறுங்கிப் போகலாம் என்ற சூழலில் நான் தற்போது இருக்கிறேன். நான் நேர்மறையாக இருக்கிறேன் ஆனாலும் சமாதானம் அடையவில்லை ஏனென்றால் அது எனக்கு இன்னும் அச்சத்தை தருகிறது.
நான் வாழ்க்கையில் பல விஷயங்களைக் கண்ட துணிச்சலான, உறுதியான ஒரு பெண். இதுவும் கடந்து போகும் என நம்புகிறேன். எதையும் யூகிக்காதீர்கள் ஏனென்றால் அது மிகவும் காயப்படுத்துகிறது. அன்பு மட்டுமே என்னை உடைக்கக்கூடிய ஒரு விஷயம்.
நான் அற்புதங்களை நம்புபவள். ஒரு அற்புதம் நடக்கும் என நம்புகிறேன். எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஏனென்றால் அது தவிர்க்க முடியாதது. எனது வாழ்க்கையில் இந்த கட்டத்தில் நான் யாருக்கும், வேறதையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இது என் வாழ்க்கை, நான் மட்டுமே இதைக் கையாள முடியும்.
நான் முதிர்ச்சியடைந்தவள். என்னை நல்லவளாகக் காட்டிக் கொள்ள, பச்சாதாபம் தேட, என் துணை மீது பழி போடும் பழக்கம் எனக்கில்லை. நான் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இது நடந்துவிட்டது. எனது குழந்தைகளையும், என்னைச் சுற்றியிருப்பவர்களையும் மனதில் வைத்து சரியான முடிவினை எடுப்பேன்.
நான் ஒரு அதிசயம் நடக்குமென நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன். அது நடக்கவில்லையென்றாலும் அந்தச் சூழலை எதிர்கொள்வேன். வாழ்க்கை தொடர வேண்டும். இனிமேல் எதுவும் என்னை உடைக்க முடியாது. முக்கியமாக நான் இன்னும் வீழ்ந்து, விட்டுக் கொடுத்துவிடவில்லை” என கூறியுள்ளார் .