சென்னை:

ரும் 10ந்தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, அன்று காணொளி காட்சி மூலம் சென்னை வண்ணாரப்பேட்டை – டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட மத்திய மாநில அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.

பிரதமர் மோடி 10-ந் தேதி திருப்பூர் வருகிறார். அங்கு பல வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் அவர் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவிலும் கலந்துகொள்கிறார்.

அப்போது, மதுரை- சென்னை இடையே அதிவேக தேஜஸ் சொகுசு ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கும் மோடி, தொடர்ந்து,  சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிக்கான புதிய கட்டிடத்தையும் காணொளி காட்சி மூலம்  திறந்து வைக்கிறார்.

அதையடுத்து,  தேனாம்பேட்டை (டி.எம்.எஸ்.)- வண்ணாரப்பேட்டை (வழி சென்டிரல்) இடையே 10 கிலோமீட்டர் தூரம் கொண்ட சுரங்கப்பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் கட்டுமான பணிகள், சிக்னல்கள் அமைக்கும் பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தன. இந்த பாதையில் மெட்ரோ ரெயில் இயக்க கடந்த வாரம் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த வழியில் மெட்ரோ ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பாம்பன் புதிய பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் மோடி, அத்துடன்,  பரமக்குடி- தனுஷ்கோடி இடையே 4 வழிப்பாதை, ராமேசுவரம்- தனுஷ்கோடி ரெயில் பாதை ஆகிய வற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதுள்ள பாம்பன் பாலம் சேதம் அடைந்துள்ள நிலையில், அதற்கு பதிலாக புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என்று மத்திய ரெயில்வே அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்தது. ரூ.250 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்படுகிறது. இதற்கான ஆய்வு பணிகள் முடிவடைந்து விட்டன. தற்போதைய பாலத்துக்கு அருகிலேயே அதைவிட 3 மீட்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது.  அதனால் ஒரே நேரத்தில் இந்த பகுதியில் 2 கப்பல்கள் கடந்து செல்ல முடியும். இதில், 63 மீட்டர் நீள தூக்கு பாலமும் இடம்பெறும். இந்த தூக்கு பாலம், செங்குத்தாக திறந்து மூடும் வகையில் இருக்கும். மின்மோட்டார் மூலம் தானியங்கி முறையில் தூக்கு பாலம் செயல்பட உள்ளது. இந்தியாவிலேயே இத்தகைய தொழில்நுட்பத்தில் தூக்கு பாலம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

கடல் நீரால் அரிப்பு ஏற்படாத வகையில் துருப்பிடிக்காத உருக்கு கம்பிகளை கொண்டு புதிய பாலம் கட்டப்படுகிறது. ‘சிலீப்பர்’ கட்டைகளும் பல்வேறு உலோகங்கள் கலந்த கலவையால் அமைக்கப்படுகிறது. இதுவும் துருப்பிடிக்காத வகையில் இருக்கும். 4 ஆண்டுகளில் புதிய பாலம் கட்டி முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட உள்ள நிலையில், அவசரம் அவசரமாக மோடி பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவது குறிப்பிடத்க்கது.