சென்னை:

ன்னியர் அறக்கட்டளை பெயர் ராமதாஸ் அறக்கட்டளை என்று மாற்றம் செய்யப்பட்டது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்து யாரும்  விமர்சிக்கக்கூடாது என ஜி.கே.மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் முத்துவிழா கண்டுள்ளதால் அவரை பெருமைப்படுத்தும் நோக்கில் வன்னியர் கல்வி அறக்கட்டளையின் பெயரை ராமதாஸ் அறக்கட்டளை என மாற்றியதாகவும்,  இந்த விவகாரத்தில் உண்மைகளை மறைத்து உள்நோக்கத்துடன் சிலர் செய்தி பரப்புவது கண்டனத்திற்குரியது, அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செயல்பட்டு வந்த வன்னியர் கல்வி அறக்கட்டளையின் பெயரை, பாமக தலைவர் ராமதாஸ் பெயரிலான அறக்கட்டளை என கடந்த வாரம் மாற்றப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வன்னிய இன மக்களும், அதிருப்தி தெரிவித்திருந்தனர். சமூக வலைதளங்களிலும் ராமதாசின் செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பாமக தலைவர் ஜி.கே.மணி, வன்னிய அறக்கட்டளை தொடர்பாக யாரும், கட்டுக்கதைகளை பரப்பக்கூடாது அவ்வாறு செய்தால் சட்டப்பூர்வமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அறக்கட்டளை பெயர் மாற்றம் குறித்து ஊடகங்களிலும் , சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவை அனைத்தும் உண்மைகளை மறைத்து, உள்நோக்கத்துடன் வெளியிடப்படுபவை; ஆகவே அவை கண்டிக்கத்தக்கவையாகும்.

வன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் மருத்துவர் அய்யா அவர்களின் கடுமையான உழைப்பால் உருவாக்கப்பட்டது ஆகும்.

மருத்துவர் அய்யா அவர்களுக்கு தற்போது முத்துவிழா ஆண்டு நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவரும், அறக்கட்டளையை உருவாக்க எண்ணற்ற தியாகங்களை செய்தவருமான மருத்துவர் அய்யாவின் பெயரை அறக்கட்டளைக்கு சூட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளும், அறக்கட்டளையின் அறங்காவலர்களும் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று மருத்துவர் இராமதாஸ் கல்வி அறக்கட்டளை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ. குரு அவர்களை கவுரவப்படுத்தும் வகையில், அறக்கட்டளையின் கீழ் சட்டக்கல்லூரி செயல்பட்டு வரும் பகுதிக்கு மாவீரன் ஜெ.குரு வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல் தான் இப்போது அறக்கட்டளைக்கு மருத்துவர் அய்யா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது மிகவும் சாதாரணமான நடைமுறை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறக்கட்டளைக்கு மருத்துவர் அய்யா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ள போதிலும், அதன் நிர்வாகத்தில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை; அவர் வேறு எந்த நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை.. அந்த அறக்கட்டளையை அரும் பாடுபட்டு தொடங்கியவர் என்ற அடிப்படையில் அதன் நிறுவனராக மட்டுமே மருத்துவர் அய்யா செயல்பட்டு வருகிறார். அன்றாட நிர்வாகத்திற்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாறாக அறக்கட்டளைக்கு நான் தான் தலைவராக செயல்பட்டு வரு கிறேன். எனது தலைமையில் தான் அறங்காவலர் குழு கூடி அறக்கட்டளைக்கு மருத்துவர் அய்யா அவர்களின் பெயரை சூட்ட தீர்மானித்தது. அறக்கட்டளைக்கு மருத்துவர் அய்யாவின் பெயரை சூட்டியதில் நாங்கள் மிகவும் பெருமை அடைகிறோம்.

பெயர் மாற்றத்திற்குப் பிறகும் அறக்கட்டளையின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இருக்காது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு சேவை நோக்கத்துடன் தரமான கல்வி, இப்போது வழங்கப்படுவதைப் போலவே எப்போதும் வழங்கப்படும்.

இந்த உண்மைகளையும், அறக்கட்டளை குறித்த விதிமுறைகளையும் அறியாமல் கட்டுக்கதைகளை திட்டமிட்டு, உள்நோக்கத் துடன் எழுதும் போக்கை சில முதன்மை ஊடகங்களும், சமூக ஊடகங்களும் கைவிட வேண்டும்.

மாறாக, உள்நோக்கத்துடன் திட்டமிட்டுஅவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

ஜி.கே.மணியின் மிரட்டல் தொனியிலான அறிக்கை ஊடகங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.