வாழப்பாடி: வட மாநிலத்தில் இருந்து வாழப்பாடி திரும்பிய இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 3 மாதங்களாக கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. ஆகையால் மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். சில நாட்களாக வடமாநிலங்களில் இருந்து வாழப்பாடிக்கு திரும்பிய 180 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இந் நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிரானைட் குவாரியில் பணியாற்றி வந்த வாழப்பாடி அடுத்த பொன்னாரம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த 36 வயது நபர், சிங்கிபுரத்தை சேர்ந்த 62 வயது முதியவர் இருவரும் சொந்த ஊர் திரும்பினர்.
அவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து இருவரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
3 மாதங்களாக வாழப்பாடி பகுதியில் எவ்வித கொரோனா தொற்றும் இல்லாத நிலையில் தற்போது கொரோனா வந்திருக்கிறது. எனவே வாழப்பாடி மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கூறி உள்ளனர்.