சென்னை: திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தச் சென்ற குஷ்பு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.  அந்த  விடுதி முன் விசிக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர், அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

இந்து பெண்கள் குறித்து அவதூறாக பேசியவிடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் போராட்டம் செய்யப் போவதாக நடிகை குஷ்பு அறிவித்திருந்தார். அதன்படி  இன்று காலை சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி காரில் கிளம்பினார். அப்போது அவர் முட்டுக்காடு அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் கேளம்பாக்கம்  பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அடைத்து வைத்துள்ளனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கேளம்பாக்கம் விடுதியில் குஷ்பூ தங்க வைக்கப்பட்டுள்ள விடுதி முன்பு திடீரென போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விடுதியின் தடுப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உடைத்து உள்ளே செல்ல முயன்றதால் பதட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த பாஜகவினரும் விடுதி அருகே கூடினர்.  பாஜக மற்றும் விடுதலைச் சிறுத்தையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து  போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,