சென்னை: தமிழக பாரதியஜனதா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள  வெற்றிவேல் யாத்திரை  வரும் 6ந்தேதி வெள்ளிக்கிழமை முருகனின் திருத்தலமான  திருத்தணியில் இருந்து புறப்படுகிறது என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் முருகன்  தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக அறிவித்துள்ள வேல் யாத்திரைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த யாத்திரைக்கு தடை கோரி வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.  இந்த நிலையில், வரும் 6ந்தேதி திட்டமிட்டபடி வேல்யாத்திரை தொடங்கும் என பாஜக தலைவர் முருகன் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து பேசிய நிலையில், பின்னர் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழக பா.ஜனதா சார்பில், வருகிற 6-ந் தேதி காலை 10 மணியளவில் திருத்தணியில் இருந்து வெற்றிவேல் யாத்திரை தொடங்க இருப்பதாகவும், இந்த யாத்திரை முருகனின் ஆறுபடை வீடுகள் உள்பட தமிழகம் முழுவதும் சென்றுவி,  இறுதியாக டிசம்பர் 6-ந் தேதி திருச்செந்தூரில் யாத்திரை நிறைவு பெறுகிறது என்று கூறினார்.

இந்த யாத்திரையில் பாரதிய ஜனதா கட்சியின்  தேசிய நிர்வாகிகள், மத்தியஅமைச்சர்கள்,  பாஜக ஆளும்  மாநிலத்தின் முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர்.  டிசம்பர் 6ந்தேதி திருச்செந்தூரில் நடைபெறும்  நிறைவுநாள் நிகழ்ச்சியில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ள  இருப்பதாகவும் கூறினார்.

இந்த யாத்திரையின் நோக்கம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்வதே என்று கூறியவர், இந்த யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர்,  ரஜினிகாந்த் மிகப்பெரிய ஆன்மிகவாதி. தேசிய சிந்தனை உடையவர். அவர் அரசியலுக்கு வருவதை பா.ஜனதா எப்போதும் வரவேற்கும் என்றார்.

அதுபோல, தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்ல ஆட்சியை வழங்கி வருவாகவும்,  எளிமையானவராகவும், மக்கள் எளிதில் அணுகக்கூடிய முதல்வராக இருப்பதாகவும் புகழ்மாலை சூட்டினார்.

மேலும், தமிழகத்தில் கொரோனா பேரிடரைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறியவர்,  தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் 3-ம் அணி அமைய வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.