சென்னை: வேலூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2ஆக பிரிக்கப்பட்டு, விழுப்புரத்திலும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் மழைக்காலக்கூட்டத்தொடர் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 3 நாள் மட்டுமே நடைபெறும், இந்த கூட்டத்தொடரின் இறுதி நாள்  கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இன்றைய நாளில், துணை பட்ஜெட் தாக்கல் உள்ப பல மசோதாக்கள் என  பல முக்கிய அம்சங்கள் சட்ட பேரவை கூட்டத்தொடரில் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை சபையில் கேள்வி நேரம் முடிந்ததும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விதி எண் 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி,  வேலூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2 ஆக பிரிக்கப்பட்டு புதிய பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.  மேலும், பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டு இந்த ஆண்டே செயல்படும் என்று கூறினார்.