சென்னை

சென்னை புழல் சிறையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று இரண்டாம் நாளாக உண்ணாவிரதத்தை தொடர்கிறார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவிக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி சென்றார்.   அவரை காவல் துறையினர் விமான நிலையத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

நேற்று வேல்முருகன் திடீர் என தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் எனவும் வற்புறுத்தி அவர் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

சிறை அதிகாரிகள் வற்புறுத்தியும் அவர் சாப்பிட மறுத்து இன்று இரண்டாம் நாளாக தனது போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.   அத்துடன் புழல் சிறையில் உள்ள பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் உள்ளிட்ட 22 பேர் அவருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.