சென்னை,

முதுபெரும் தமிழறிஞரான மா.நன்னன் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 94.

தமிழ்க் கட்டுரை, பாட நூல்கள் உள்பட 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தொலைக்காட்சியில் பல்வேறு தமிழ் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.

விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் என்னும் கிராமத்தில் பிறந்த மா.நன்னன் பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, திரு.வி.க. விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற நன்னன், எழுத்து அறிவித்தலில் ‘நன்னன் முறை’ என்ற புதிய முறையை உருவாக்கியவர்.

வெள்ளையேன வெளியேறு, இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். நன்னனின் இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன் ஆகும்.

. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் உயர்நிலைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவைகளில் பணிபுரிந்துள்ளார்.

மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பின் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராக 11.2.1980 முதல் 31.5.1983 வரை பணியாற்றியவர். வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். எழுத்தறிவித்தலில் நன்னன் முறை எனும் புதிய முறையை ஏற்படுத்தியவர்.

சென்னைத் தொலைக்காட்சியில் 17 ஆண்டுகள் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் தமிழ் கற்பித்துள்ளார்.

பெரியார் கொள்கைகளின் மீது பற்று கொண்ட இவர் பெரியார் கொள்கைகள் குறித்து பல நூல்களை எழுதியுள்ளார்.இவர் எழுதிய ‘பெரியாரைக் கேளுங்கள்’ எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமூகவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

94 வயதாகும் நன்னன், வயது முதிர்வு காரணமாக சக்கர நாற்காலி உதவிடன் வலம் வந்தார். இந்நிலையில் இன்று காலை தனது  சைதாப்பேட்டை இல்லத்தில் காலமானார்.

இவருக்கு பார்வதி என்ற மனைவியும் வேண்மாள், அவ்வை என்ற மகள்களும் அண்ணல் என்ற மகனும் உள்ளனர்.