டெல்லி: நாடு முழுவதும் இன்று 2வது கட்டமாக 60வயதை கடந்த  முதியோர்களுக்கு தடுப்பூசி போடும் நிகழ்வு தொடங்கிய நிலையில், சென்னையில் உள்ள அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில், துணை குடியரசுத்தலைவர் வெங்கைநாயுடு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் முதல்கட்ட தடுப்பூசி போடும்  ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  இன்று (மார்ச் 1ந்தேதி)  2வது கட்ட தடுப்பூசி போடும்பணி இன்று தொடங்கியது. இந்த முறை, 60 வயது முதியவர்கள் மற்றும் வேறு நோய் தாக்கம் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பிரதமர் மோடி இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று, தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் தடுப்பூசி போட்டுவருகின்றனர்.

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார்,  ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த நிலையில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.