சாய்பாபாவின் அருள் கிடைக்க வியாழக்கிழமை தோறும் தொடர்ந்து 9 வாரங்கள் விரதம் இருந்து வந்தால் எண்ணியது நடக்கும். இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்.
விரதத்தை வியாழக்கிழமையில் மட்டுமே சாயி நாமத்தை எண்ணி தொடர வேண்டும்.

எந்த செயலுக்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாய்பாபாவை நினைத்துக் கொள்ள வேண்டும்.

காலை அல்லது மாலை சாய்பாபாவுக்கு பூஜை செய்ய உகந்த நேரம் ஆகும். இந்த விரதத்தை நீங்கள் மேற்கொள்ளும் போது  வெறும் வயிற்றுடன் பூஜை செய்ய கூடாது. ஏதேனும் பழங்கள், பால் இனிப்புகள்  உற்கொண்ட பின்னரே செய்ய வேண்டும்.

அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை (மதியமோ, இரவோ) உணவு எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாள் முழுவதும் பட்டினியாக இருந்து இந்த விரதத்தை எடுக்கக் கூடாது.
ஒரு பலகையில் மஞ்சள் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து சுத்தமான  நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்.

மஞ்சள் நிறம் கொண்ட மலர்களால் ஆன மாலையை சாய்பாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம். (பழங்கள், இனிப்புகள், கற்கண்டு ) ஏதாவது ஒன்று  நெய்வேத்தியம் வைத்து,  எல்லொருக்கும் கொடுத்து சாய்பாபாவை வேண்டலாம்.

முடிந்தால் சாய்பாபாவின் கோவிலுக்குச் செல்லலாம். அது முடியாத சமையத்தில் வீட்டிலேயே சாய் பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும். சாய் விரத கதை, சாய் பாமாலை, சாய் பவானி இவற்றை பக்தியுடன் விரத நாட்களில் படிப்பது நல்லது.

ஒரு வேளை, வெளியூர் செல்வதானாலும் இந்த விரதத்தை நீங்கள் தொடரலாம்.

விரதத்தின் போது ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாதவிலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் தொடர முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்.

விரத நிறைவு முறைகள்;

1) ஒன்பதாவது வியாழக்கிழமை ஐந்து ஏழைகளுக்கு தங்களால் இயன்ற உணவு அளிக்க வேண்டும். நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யலாம்.

2) சாய்பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9-வது வியாழக்கிழமை இந்த சாய் விரத புத்தகங்களை நம்முடைய வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள், உறவுகள், பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக கொடுக்கவும். 5 அல்லது 11 அல்லது 21 என்ற எண்ணிக்கையில் கொடுப்பது நல்லது.

3) புத்தகத்தை கொடுக்கும் முன்பு  அன்று பூஜையில் வைத்த பிறகு கொடுக்க வேண்டும்.
4) மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.வெற்றி நிச்சயம். சாய்பாபாவின் அருள் உங்களுக்கு நிறந்தரமாக கிடைக்கப் பெருவீர்கள்.

தமிழ் இனியா