பெங்களூரு :
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமானநிலையத்தில் இருந்து ’’இண்டிகோ’ விமானம் நேற்று மாலை 4:40 மணி அளவில் புறப்பட்டு பெங்களூரு வந்து கொண்டிருந்தது.
விமானம் நடுவானில் பறந்த போது, அதில் அமர்ந்திருந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து விமான சிப்பந்திகளுக்கு தெரிய வந்ததும், நடுவானில் பறந்த விமானத்துக்குள், மறைப்பை ஏற்படுத்தினர்.

நல்ல வேளையாக அந்த விமானத்தில் டாக்டர் ஒருவரும் பயணம் செய்துள்ளார். விமான சிப்பந்திகள் உதவியுடன், அந்த பெண்ணுக்கு டாக்டர் பிரசவம் பார்த்துள்ளார்.
சரியாக 6:30 மணி அளவில் அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
7:30 மணிக்கு அந்த விமானம் பெங்களூரு விமானநிலையத்தில் தரை இறங்கியது.
ஓடும் விமானத்தில் பெண்ணுக்கு குழந்தை பிறந்த தகவல் விமான நிலைய அலுவலர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தாய்க்கும், குழந்தைக்கும் விமான நிலைய ஊழியர்கள் அன்பான வரவேற்பு அளித்தனர்.
டாக்டர்கள் குறித்து கொடுத்த நேரத்துக்கு முன்பாவே, அந்த பெண்ணுக்கு பிரசவம் நடந்ததாக குறிப்பிட்ட மருத்துவர்கள், தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.
– பா.பாரதி