கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியா முழுக்கவே மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியா முழுவதுமே அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை.

படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், அந்தந்த திரையுலகினர் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள். மேலும், பி.எம் கேர்ஸ் நிதி, முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கும் திரையுலகப் பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய் 1 கோடி 30 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் . இதில் பி.எம் கேர்ஸ் நிதிக்கு 25 லட்ச ரூபாய், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாய், ஃபெப்சிக்கு 25 லட்ச ரூபாய், கர்நாடகா முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், பாண்டிச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் என அறிவித்துள்ளார் விஜய்.

இவை போக, ஒரு தொகையை தனது நற்பணி மன்றங்களுக்கு அனுப்பிவைத்து அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகவும் உதவிகள் செய்ய முடிவு செய்துள்ளார் விஜய்.