பெங்களூரு:

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பங்குதாரரிடமும், பிள்ளைகளிடமும் கடன் பெற்று வாழ்க்கை நடத்தி வருவதாகவும் கர்நாடக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸுக்காக ஸ்டேட் வங்கியில் 10 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து தப்பியோடிய மல்லையாவின் சொத்துகள் முடக்கப்பட்டன. மல்லையாவுக்கு எதிராக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 13 வங்கிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பா கர்நாடக நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் ஜான் பிரிஸ்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விஜய் மல்லையா திவாலாகிவிட்டார். தன் பங்குதாரர் பிங்கி லால்வானி, தனி உதவியாளர், தன் பிள்ளைகளிடம் கடன் பெற்றுத் தான் அவர் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

தனது பங்குதாரர் லால்வானி ஆண்டுக்கு ரூ.1.35 கோடி சம்பாதிக்கிறார். மல்லையா சொத்தாக ரூ. 2,956 கோடி வைத்துள்ளார். இந்த சொத்துகள் கடனை ஃபைசல் செய்வதற்காக முடக்கப்பட்டுள்ளது.

தனது உதவியாளரிடம் ரூ.75.7 லட்சமும், பங்குதாரரிடம் ரூ.1.15 கோடியும் கடனாக பெற்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
வழக்கு செலவு மற்றும் சொந்த செலவாக வாரந்தோறும் அவருக்கு ரூ. 16.21 லட்சம் தேவைப்படுகிறது.
அவரது இங்கிலாந்து வங்கி கணக்கு முடக்கப்பட்டிருப்பதால், அவரால் பெரும் தொகையை எடுக்க முடியவில்லை. அதனை எடுக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் என்றார்.