கடந்த செவ்வாயன்று மோசடி மன்னன் விஜய் மல்லையா தனது சொத்து விபரங்களை அறிவிக்காததை குறித்து போடப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதையடுத்து இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று ரூ 9 ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடி செய்த விஜய் மல்லையா நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்கி தனது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த விபரங்களின்படி 2016-ஆம் ஆண்டு மார்ச் 31- ஆம் தேதியின் படி தன்னிடம் கையிருப்பு உள்ள கையிருப்பு தொகை 16,440 ரூபாய் மட்டுமே எனவும், வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை மொத்தம் ரூ.12.6 கோடி ரூபாய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது வங்கியில் உள்ள வைப்புத் தொகையை தற்சமயம் வருமானவரித்துறை முடக்கி வைத்துள்ளது. அதேபோல வெளிநாட்டு சொத்துக்களின் அளவு 5.2 மில்லியன் டாலர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதைக் கேட்ட உச்சநீதி மன்ற நீதிபதிகள் டியாகோ நிறுவனத்தில் இருந்து பெற்ற 40 மில்லியன் டாலர் என்னவானது என்று கேள்வி எழுப்பினர்.
டியாகோ நிறுவனத்தின் சேர்மன் பதவியிலிருந்து மல்லையா விலகியபோது ஒப்பந்தப்படி அந்நிறுவனம் தர வேண்டிய மொத்த பணமான 75 மில்லியன் டாலர்களில் 40 மில்லியன் டாலர் பணத்தை உடனடியாகவும் மிதமுள்ள பணத்தை ஐந்து ஆண்டுகளிலும் செட்டில் செய்வதாக இருந்த ஒப்பந்தத்தை காட்டி நீதியரசர்கள் மல்லையா கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி டியாகோ நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட 40 மில்லியன் டாலர்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.
அந்த 40 மில்லியன் டாலர்கள் குறித்த கணக்கு எங்கே? அவ்வளவு பணம் வெறும் 40 நாட்களில் மாயமானது எப்படி? என்று கேட்டு நீங்கள் இன்னும் ஒழுங்கான சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர்.