விஜயுடன் ‘மாஸ்டர்’ படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, ஹீரோவாக நடித்துள்ள ஐந்தாறு படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடுவதிலும், அதில் தனது கேரக்டர் பெரிதாக பேசப்படுவதிலும் மகிழ்ச்சியாக இருக்கிறார், விஜய் சேதுபதி.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மனம் திறந்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

“திருமணத்துக்குன் பிறகுதான் சினிமாவில் நான் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். என் மனைவிக்கு நான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடுவது தெரியாது. ஐந்து ஆண்டுகள் ஹீரோ நண்பன், போன்ற துணை வேடங்கள் தான் கிடைத்தன.

அப்போது நான் சினிமாவில் நடிக்கும் தகவல் தெரிய வந்தபோது, குழந்தைகள் எதிர்காலம் குறித்து மனைவி கவலை பட்டார். கஷ்டப்பட்டு நல்ல நிலைக்கு வந்துள்ளேன்” என்ற விஜய் சேதுபதியிடம் “கதாநாயகனாக நடித்த போதும் வில்லன் வேடத்தில் நடிப்பது ஏன்?” என கேட்டபோது அவர் அளித்த பதில் :

“மூத்த நடிகர்களுடன் நடிக்கும் போது, நான் அவர்களின் மாணவனாகவே மாறி விடுவேன். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்காகவே, வில்லனாக நடித்தேன்.

விஜய் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள நடிகர், அவரது எனர்ஜியின் ரகசியம் என்ன என்பதை அறியவே அவருக்கு வில்லனாக நடித்தேன் கற்றுக்கொண்டேன்.

ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோருடன் வில்லனாக நடித்ததும், இதே காரணத்துக்காகத்தான்” என்று ரகசியம் உடைத்தார், விஜய் சேதுபதி.

– பா. பாரதி