சென்னை:

மிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு தேமுதிக தலைவர்  விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி கடந்த 2ந்தேதி நியமனம் செய்யப் பட்டதாக,  காங்கிரஸ் தலைமை  அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவருடன் செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

காங்கிரஸ் தலைவராக அழகிரி நியமனம்  செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு அரசியல் கட்சியினர், காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட் செய்துள்ளார். விஜயகாந்த் தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், டிவிட்டர் மூலம் அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக திரு.K.S.அழகிரி அவர்கள் நியமிக்கப்பட்டதற்கும், மேலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதற்கும் தேமுதிக சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். புதியதாக பதவியேற்றவர்கள் தங்கள் இயக்கத்திற்கு பெருமை, புகழ் சேர்த்திட மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.