காரைக்குடி,

தேமுதிக கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று காரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிகவின் நிரந்தர பொதுச்செயலாளராக விஜயகாந்த் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா கட்சியின் முக்கிய இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்பட வில்லை.

ஆனால், இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுவரை தேமுதிகவில் பொதுச்செயலாளர் என்ற பதவி கிடையாது. அந்த பதவி தற்போது உருவாக்கப்பட்டு, அந்த பதவிக்கு விஜயகாந்தை பொதுச்செயலாளராகவும், அதுவும் நிரந்தர பொதுச்செயலாளர் என்றும்,  விஜயகாந்தின்  மைத்துனர் எல்.கே.சுதீஷ் துணைச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கட்சி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜயகாந்துக்கு அதிகாரம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவர்களுடன்  சேர்ந்து பார்த்தசாரதி, ஏ.ஆர்.இளங்கோவன் உள்ளிட்ட 4 பேர் துணை செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேமுதிக அவைத் தலைவராக அழகாபுரம் மோகன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு எந்த வித பொறுப்புகளும் வழங்கப்படவில்லை.

அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவி ஒழிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், தேமுதிகவுல் புதியதாக பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.