சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையான மியாட்டில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், பிரேமலதா உடல்நிலை சீராக உள்ளது என மியாட் மருத்துவமனை  நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

கடந்த 14 ஆம் தேதி அன்று தேமுதிகவின் 14 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் விஜயகாந்த் உள்பட கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், கடந்த வாரம் சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, அவரது மனைவி பிரேமலதாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரும் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள  மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகிறார்.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது,

பிரேமலதா விஜயகாந்துக்கு கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்யப்பட்டு செப்டம்பர் 29 ஆம் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.

பிரேமலதா விஜயகாந்தின் முதல்நிலை பரிசோதனைக்குப் பின் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. தொடர் மருத்துவச் சேவைகளினால் அவர் நல்ல முன்னேற்றமடைந்திருக்கிறார்.

இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.