சென்னை:

டல் நலம் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் சனிக்கிழமை (16ந்தேதி) சென்னை திரும்புகிறார் என்று அவரது மைத்துனரும், தேமுதிக துணைச்செயலாளருமான எல்.கே.சுதீஷ் தெரிவித்து உள்ளார்.

கடந்த சில வருடங்களாக உடல் பாதிக்கப்பட்டு, பேச முடியாமல் கஷ்டப்பட்டு வரும் விஜயகாந்த்,  கடந்த ஆண்டு (2018) சம்பர் மாதம் 18-ந்தேதி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மனைவி பிரேமலதாவும் சென்றிருந்தார்.

அமெரிக்காவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த்  வரும் 16-ந்தேதி காலை சென்னை திரும்புவதாக தேமுதிக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தே.மு.தி.க. நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் வரும் 16-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு தாயகம் திரும்புகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், கூட்டணி குறித்து இறுதி  முடிவு எடுக்கப்பட வேண்டியதிருப்பதால் விஜயகாந்த் சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது.