கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் நாள், சேலத்திலிருந்து சென்னை வந்த விரைவு ரயிலின் மேற்கூரையைத் துளையிட்டு, மர்ம நபர்கள் 5.75 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதை மையமாக வைத்து த்ரில்லர் அம்சத்துடன் அசுரகுரு உருவாகியுள்ளது.விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை இயக்குநர் ராஜ்தீப் என்பவர் இயக்கியுள்ளார்.

மகிமா நம்பியார் ஹீரோயினாக நடிக்க யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜே.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.எஸ்.பி.சதீஷ் தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி ராஜ்தீப் இயக்கியுள்ளார். கபிலன் வைரமுத்து, சந்துரு, மாணிக்கவாசகம் ஆகியோர் வசனம் எழுதியுள்ளனர். கணேஷ் ராகவேந்திரா இசையமைக்க, ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ’அசுரகுரு’ வரும் மார்ச் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.