சென்னை:

மிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைக்கு வேட்புமனுத் தாக்கல் இன்றோடு முடிவடைகிறது. இந்த நிலையில், அங்கு போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு  அடுத்த மாதம் 21ந் தேதி நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்செல்வனும், தி.மு.க. சார்பில் புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். அங்கு திமு.க., அதிமுக இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

அதுபோல, நாங்குநேரி தொகுதியில்  அ.தி.மு.க. சார்பில் நாராயணனும், தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர்.

அதுபோல புதுச்சேரி  காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமாரும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23ந் தேதி தொடங்கிய நிலையில், அங்கு இதுவரை  8 பேரும், நாங்குநேரியில் 12 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுவதால் அரசியல் கட்சிகள் தவிர மேலும் பல சுயேச்சைகள் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. அதையடுத்து 2ந்தேதி விடுமுறை தினம் என்பதால், அடுத்த நாளான  3-ம் தேதி மாலை 3 மணிவரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து, அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்குப் பதிவு வருகிற 21-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதியும் நடைபெற உள்ளன.