சென்னை:

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைந்தது. அதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல்  அக்டோபர் 3ந்தேதி அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது.

இந்த நிலையில், கடந்த 23ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், இன்றுடன் முடிவடைந்தது.

நாங்குநேரி  தொகுதி:-

இந்த தொகுதியில் அதிமுக சார்பாக வெ.நாராயணனும், அதேபோல திமுக கூட்டணியில் உள்ள காங்கிரெஸ் சார்பாக ரூபி மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக இந்த தொகுதியில் சா.ராஜநாராயணன் வேட்பாளராக களம் காண்கிறார். நாங்குநேரி தொகுதியில் மொத்தம் 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதி:

அதிமுக சார்பாக எம்.ஆர். முத்தமிழ் செல்வனும், திமுக சார்பில் விக்கிரவாண்டியில் புகழேந்தியும், நாம் தமிழர் கட்சி சார்பாக கு.கந்தசாமி போட்டியிடுகிறார்கள். இங்கு மொத்தம் 23 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி:

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் இருக்கும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்த கட்சியின் சார்பாக புவனேஸ்வரன் போட்டியிடுகிறார். இந்த இரண்டு கட்சிகளையும் எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவினா மதியழகன் போட்டியிடுகிறார்.  புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மொத்தம் 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாளை  வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.

அக்டோபர் 3 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் வேட்பு மனுக்களை திரும்பப்பெறும் கடைசி நாளாகும்.

அதன் பிறகு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும்

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும். அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.