சென்னை: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., ஜி.வி.மார்க்கண்டேயன் தலைமையில் அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயம் வந்து, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (9.10.2020), காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., ஜி.வி.மார்க்கண்டேயன் தலைமையில் C¬ADD CENTER, Managing Director கரையடிசெல்வன், தொழில் அதிபர் கே.செல்வகுமார், அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்கள் இனாம்அருணாசலபுரம் ஆர்.துரைபாண்டியன், ஆற்றங்கரை வி.சீத்தாராமன், ரஜினி மக்கள் மன்ற விளாத்திகுளம் ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் சி.விநாயகமூர்த்தி, மேலநம்பிபுரம் எஸ்.பாலமுருகன் (ஊராட்சி செயலாளர்), எஸ்.செல்வகுமார், ரஜினி மக்கள் மன்ற விளாத்திகுளம் ஒன்றிய இணைச் செயலாளர் அ.பாலமுருகன், அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு த.தவசி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்நிகழ்வின்போது முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, எம்.எல்.ஏ., கழக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, எம்.பி., செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கீதாஜீவன், எம்.எல்.ஏ., விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், “திசை தெரியாமல் வரலாற்றில் ஊழலின் உச்சத்திற்குச் சென்றுள்ள, அ.தி.மு.க தலைமை தத்தளித்துக்கொண்டிருக்கிற சூழலில் அவர்களுக்கு மரண அடி கொடுப்பதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தயாராக உள்ளார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மகுடம் சூட்ட உழைப்பதற்காக தி.மு.கவிற்கு வந்துள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தி.மு.க தலைவர் முன்னிலையில் சென்னை கிழக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த துறைமுகம் பகுதி முன்னாள் செயலாளரும் – ஜார்ஜ்டவுன் நகர கூட்டுறவு வங்கி இயக்குநருமான எம்.வி.ஆர். சரவணகுமார், பி.ஏ.,பி.எல் தி.மு.க.வில் இணைந்தார்.