மூத்த பத்திரிகையாளர்  எஸ். கோவிந்தராஜன் ( Govindaraj Srinivasan)  அவர்கள்,  “வில்லாதி வில்லன் வீரப்பன்” திரைப்படம் குறித்து “சந்தனக்காட்டு மர்மங்கள்…!” என்ற தலைப்பில் எழுதியுள்ள முகநூல் பதிவு:
download
** வீரப்பனால் கொல்லப்பட்ட அதிகாரியின் மனைவி, வீரப்பன் மனைவி முத்துலட்சுமியுடன் நெருங்கி பழகி, அந்த பழக்கம் மூலமாக வீரப்பனை வளைக்க எஸ்டிஎப் முயற்சி செய்கிறார்கள். அதில் தோல்வி. அடுத்து,  சிறையில் உள்ள மதானி மூலமாக தனக்கு ஏற்பட்ட ஆள் பற்றாக்குறையை போக்க வீரப்பன் எடுத்த முயற்சியை, பயன்படுத்தி எஸ்டிஎப் வீரர்களை உள்ளே அனுப்பி பிடிக்க முயற்சிக்கிறார்கள். அதிலும் தோல்வி.
அடுத்ததாக, புலிகள் தலைவர் பிரபாகரனை, வீரப்பனுக்கு மிகவும் பிடிக்கும் என்ற தகவலை கொண்டு, தமிழ்தீவிரவாதிகள் மூலம், பிரபாகரனை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறி வீரப்பனுக்கு வலைவீசுகிறார்கள்.  அதற்கு  வீரப்பன் உடன பட…   வீரப்பன் குழுவினரை, ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வருகிறார்கள். அப்போது  வாகன ஓட்டி மற்றும் மற்றொருவர் ஏற்கனவே திட்டமிட்ட இடத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தி விட்டு ஓடிவிட, அங்கு தயாராக இருந்த அதிரடிப்படை துப்பாக்கிகள் கணக்கில் அடங்கா குண்டுக்ளை சுட்டு வீரப்பனை கொலை செய்கிறது. இப்படித்தான்  கதையை முடித்திருக்கிறார் “வில்லாதி வில்லன் வீரப்பன்” பட இயக்குநர் ராம்கோபால்வர்மா.
** அதிரடிப்படையில் பணிபுரியும் ஒரு அதிகாரியின் தந்தை தமிழ் தீவிரவாதி என்றும், அவர் மூலம் வீரப்பனுக்கு எஸ்டிஎப்பில் நடக்கும் அனைத்து முடிவுகளும் தெரிய வருவதாகவும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.
** படப்பிடிப்பு நடந்த இடம், படத்தில் நடித்தவர்கள் என எந்த நேட்டிவிட்டியும் இல்லாததால், எந்த காட்சியும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
** “இதுவரையில் நமக்கு என்ன கிடைச்சுது…சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை நம்ம கடத்தினோம்… ஒன்பது கோடி ரூபா கேட்டோம்… ஆனா நமக்கு என்ன கெடைச்சுது… வெறும் ஏழு லட்சம்…எல்லா பணவெறி பிடிச்ச நாய்களும் ஏமாத்திகிட்டு இருக்காங்க…அவனுக குடலை உறுவி ஒருநாளைக்கு நான் மாலையா போடுவேன்… அப்பத்தெரியும்டா அவங்களுக்கு யார் இந்த வீரப்பன்னு.”   என்று ஒரு காட்சியில் வீரப்பன் கோபத்துடன் கூறுகிறார்.
** கூடுதலாக தனது படையில் ஆட்களை சேர்த்துக்கொண்டு ராஜ்குமாரைப்போல், ரஜினிகாந்த், காஞ்சி சுவாமிகள் ஆகியோரை கடத்த திட்டமிருப்பதாக வீரப்பன் பேசுவது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது.
** சிறையில் உள்ள மதானி (அப்துல் நாசர் மதானி?) மூலம் வீரப்பன் படைக்கு ஆட்களை அனுப்பும் காட்சியில், அவர்களை முஸ்லீம்கள் போன்ற தோற்றத்தில் அனுப்புவது, வீரப்பனை அதிரடிப்படையினர் சுட்டுக்கொல்லும் போது, டேபிள் சேர் போட்டு அதிரடிப்படை தலைவர் டீ சாப்பிட்டுக்கொண்டே அதனை பார்ப்பது போன்ற பல அபத்த காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது.
** வீரப்பன் பெண் உள்பட தன்னை காட்டிக்கொடுத்தவர்களை கொல்லும் காட்சிகள், தன் குழந்தையை தானே கொன்றதாக கூறிவிட்டு, அது தவறு என முத்துலட்சுமி மூலம் மறுக்கச் செய்வது என பல முரண்பாடுகள்.
** வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் உதவியாய் இருந்த அனைவரின் ‘கதையையும்’ முடித்து விடுகிறார் படத்தில் வரும் எஸ்டிஎப் தலைமை அதிகாரி. அது கூட உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என தோன்றுகிறது. ஏனேன்றால், வீரப்பன் ஆப்ரேஷன் தொடர்பாக இதுவரை யாரும் உறுதியான தகவல்களை சொல்லவில்லை என்பதுதான் அதற்கு காரணம்.
** இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கதைக்கரு 60 சதவீதம் சரியானது என வீரப்பனை ‘வீழ்த்திய’ விஜயகுமார் ஏற்கனவே சொல்லியிருந்தார். அதன்படி வீரப்பனை பிடிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை சரியாக அறிந்துருந்தும், அதனை கட்சிப்படுத்திய விதம் படு சொதப்பல்.
**வீரப்பனை தெரியாத இந்தி பேசும் மக்களுக்கு வேண்டுமானால், இந்த படம் புதிய விஷயமாய் இருக்கும். வீரப்பனை நன்றாக அறிந்த தமிழக மக்களுக்கு, ‘வில்லாதிவில்லன் வீரப்பன்’ பழங்கஞ்சிதான்.
** வீரப்பன் தொடர்பாக ஏற்கனவே பல சினிமாக்கள் வந்திருந்தாலும், மக்கள் தொலைக்காட்சியில் இயக்குநர் கவுதமனின் ‘சந்தனக்காடு’ தொடர் வீரப்பனின் வாழ்வு குறித்த பல தகவல்களை உண்மைத்தன்மையுடன் பதிவு செய்து இருந்தது.
** தற்போது வீரப்பனின் உண்மை கதையை முத்துலட்சுமியே படமாக்குவதாக அறிவித்துள்ள நிலையில், சந்தனக்காட்டு உண்மைகளில் மேலும் சில விபரங்கள் தெரிய வரலாம். ஆனலும் சந்தனக்காட்டு மர்மம் முழுமையாய் விளங்காது.