விழுப்புரம்:
குடும்ப முன்விரோதம் காரணமாக, விழுப்புரத்தில் 10ம் வகுப்பு மாணவி உயிரோடு  எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய அதிமுகவினர் 2 பேரையும், அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கி அறிவித்து உள்ளது.

விழுப்புரம் அருகே சிறுமதுரை என்ற ஊரில் ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீயை முன் விரோதம் காரணமாக,  அந்த பகுதியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள்  கலியபெருமாள் மற்றும்  முருகன் ஆகியோர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக கூறப்பட்டது.  இது தொடர்பாக அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் உரிமைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு ஆணை பிறப்பித்தது.
இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட தாலும் ,கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் , கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ,கலியபெருமாள் (சிறுமதுரை புதுக்காலணி கிளை செயலாளர் ) ,முருகன் (சிறுமதுரை காலனி கிளை செயலாளர் ) ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.