உச்சிப்பிள்ளையார் கோயில் தென்னிந்திய மாநிலமான தமிழகத்தி்ன் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும்.

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.

ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது. இப்பாறைக்கு மலைக் கோட்டை என்ற பெயரும் உண்டு.

இக்கோயில் மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும்.

இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக கொண்டா டப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நாளை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

இந்த விழாவிற்காக 150 கிலோவில் மிக பிரமாண்டமான கொழுக்கட்டை தயாரிக்கும் பணி புதன்கிழமையே தொடங்கியது.

இதில் தேங்காய், பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கப்படும்.

இந்த கொழுக்கட்டை தயாரிப்பது தொடர்பான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 25-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 7-ந் தேதி வரை 14 நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.