சென்னை: 2021ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி வரையில் விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக அரசானது  அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் விதிகளை மீறி 2007ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களைக் கண்காணித்து ஒழுங்குபடுத்த, நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு பரிந்துரைகள்படி புதிய விதிமுறைகளை தமிழக அரசு வகுத்தது.

அதன்படி, 2007ம் ஆண்டுக்கு முன் விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப்படுத்தி அனுமதி தரப்படும். அதற்கான கட்டணத்தை கணக்கிட்டு, 6 மாதத்துக்குள் இணையதளம் மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்று 2017ம் ஆண்டு  ஜூன் மாதம் அறிவித்தது.

அப்போது அளிக்கப்பட்ட 6 மாத அவகாசம், அந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, 2018ம் ஆண்டு மார்ச் வரையும், பின்னர் ஜூன் மாதம் வரை, பிறகு மீண்டும் டிசம்பர் வரை என 3 தவணைகளாக அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

கடைசியாக 2018ம் ஆண்டு டிசம்பவர் 21ம் தேதி காலக்கெடு முடிந்தது. இதையடுத்து,  2019ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி வரையும் அதன்பின், டிசம்பர் 20ம் தேதி வரையும், தொடர்ந்து இந்தாண்டு ஜூன் 21ம் தேதி வரையும் நீட்டித்தது.

தற்போது 7வது முறையாக ஓராண்டுக்கு, அடுத்தாண்டு (2021) ஜூன் 21-ம் தேதி வரையில் விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் காலக்கெடுவை நீட்டித்து தமிழக வீட்டுவசதித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.