திருவனந்தபுரம்:

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் சிறையில் சட்டத்துக்குப் புறம்பாக சலுகைகளை அனுபவித்து வருவதாக கேரள மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

பிரபல நடிகை பாவனாவை காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காவலை ஆகஸ்ட் 22ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சிறையில் திலீப் ராஜ வாழ்க்கை வாழ்வதாக புகார் எழுந்துள்ளது. திலீப்பின் பக்கத்து அறையில் சிறைவைக்கப்பட்டிருந்த ஒருவர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மலையாள மீடியாவுக்கு பேட்டி அளித்துள்ளார்.

“பகல் நேரம் முழுதும் திலீப் அதிகாரிகளின் அறையில் தான் பொழுதைக் கழிக்கிறார். அதிகாரிகளுக்கு தயாரிக்கப்படும் உணவை தான் அவர் உண்கிறார். இரவில் தூங்க மட்டுமே தனது அறைக்கு வருகிறார். திலீப்பின் உடைகளை துவைக்க, அவர் பயன்படுத்தும் பாத்திரங்களை கழுவ, கழிவறையை சுத்தம் செய்ய கைதி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சில சமயங்களில் திலீப்புக்கு வெளியில் இருந்து உணவு வருவதும் உண்டு. அதை அதிகாரிகளுடன் அமர்ந்து திலீப் சாப்பிடுவார்” என்று அந்த நபர் தெரிவித்துள்ளார். இது கேரள மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.