2016ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், தோனி உடனான தனது ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி சமூகவலைதளத்தில் மேற்கொண்டுள்ள பதிவு கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியின் ஒரு கட்டத்தில், கோஹ்லியுடன், தோனி களமிறங்கி ஆடினார். இது குறித்த புகைபடத்தை தற்போது சமூக வலைதளமான டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ள இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி, ”இந்த போட்டியை என்னால் மறக்க முடியாது.ஸ்பெஷலான இரவு. பிட்னஸ் தேர்வைப் போல் தோனி என்னை ஓட வைத்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தோனி ஓய்வு அறிவிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக வெளியாகி வந்த தகவல்களால், அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், கோஹ்லியின் இப்பதிவு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், ச்சின் உள்ளிட்ட மூத்த நட்சத்திர வீரர்கள் அனைவருக்கும் ஃபேர்வெல் போட்டி வைப்பது போல, தோனியும் தனது கடைசி ஃபேர்வெல் போட்டியில் பங்கேற்று, பின்னர் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.