சென்னை:

விருத்தாச்சலம் அதிமுக எம்எல்ஏ கலைச்செல்வன் சென்னை அடையாறில் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது.

இதன் பின்னர் கலைச்செல்வன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ 122 எம்.எல்.ஏக்களில் ஒருவரை துணை முதலமைச்சராக்காமல், சின்னத்தை முடக்க காரணமான பன்னீர்செல்வத்தை துணை முதலமைச்சராக்கியது ஏன்? பன்னீர் செல்வத்தை துணை முதல்வராக்க வேண்டிய கட்டாயம் என்ன? என்னை போன்று மனக்குமுறலுடன் பல எம்எல்ஏக்கள் உள்ளனர்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் இழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை ஏற்க முடியாது. ஆதரவு எம்.எல்.ஏக்களில் ஒருவரை கூட ஏன் துணை முதல்வராக ஆக்க விரும்பவில்லை.

எங்கேயோ ஒரு இடத்தில் கட்சியை அடமானம் வைக்க நினைக்கும் ஓபிஎஸ்.க்கு பொறுப்பு தந்தது ஏன்?.எம்ஜிஆரின் கட்சி, அம்மாவின் ஆட்சி சசிகலாவின் தலைமையில் தான் இருக்கவேண்டும்

சசிகலா இல்லையென்றால் இன்றைய அரசாங்கம் இல்லை என்பதை அரசாள்பவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.இரட்டை இலை சின்னத்தை முடக்கியவர்களுக்கெல்லாம் ஒருங்கிணைப்பாளர் பதவி தருகிறீர்கள்.

கட்சியை உடைத்து இரட்டை இலை சின்னத்தையும் ஓபிஎஸ் தான் முடக்கினார். ஜெயலலிதாவின் ஆன்மா என்னை போன்றவர்களிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறது. முதல்-வர் பழனிசாமி, அமைச்சர்கள் நன்றி மறந்து செயல்படக்கூடாது’’ என்றார்.