ர்.கே.நகர் இடைத் தேர்தலில், நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக சமூகவலைதளங்களில் நேற்று மாலை முதல் ஒரு செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், “கமல் சார்பாகத்தான் விஷால் போட்டியிடப்போகிறார். இதன் மூலம், மக்களிடம் தனக்கு இருக்கம் செல்வாக்கை பல்ஸ் பார்க்க நினைக்கிறார் கமல்” என்றும் தகவல் பரவியது.

இதற்கு,, “லாஜிக்(!)கான காரணமும் சொல்லப்பட்டது.

அதாவது, “தென் இந்திய நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார் விஷால்.  அப்போது சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் அடங்கிய சீனியர் டீமை எதிர்கொண்டார்.

சரத்குமார் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளித்ததாக கூறப்பட்ட நிலையில், விஷால் அணிக்கு ஆதரவாக இருந்தார் நடிகர் கமல்ஹாசன்.

பிறகு ஏதேதோ நடந்து கட்சி துவங்கப்போவதாக அறிவிக்கும் அளவுக்கு கமல் வந்தவிட்டது அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில், தனது சார்பாக விஷாலை களம் இறக்கி, தனக்கான ஆதரவு குறித்து

தெரிந்துகொள்ள கமல் திட்டமிட்டிருக்கிறார்.

ஆர்.கே.நகர் தொகுதியை உள்ளடக்கிய வட சென்னை பகுதிப் பிரச்சினைகளுக்காக கமல் சமீபகாலமாக தொடர்ந்து குரல் கொடுத்து அப்பகுதி மக்களிடம் நற்பெயரை சம்பாதித்துள்ளார். ஆகவே விஷாலுக்காக அவர் பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்.

விஷால் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, கணிசமான வாக்குகளை பெற்றாலே, தனக்கான அரசியல் எதிர்காலத்துக்கு சிறப்பான பாதை அமைக்கும் என்று கமல் கருதுகிறார்” என்பதுதான் சமூகவலைதளங்களில் பரவிய.. பரப்பப்பட்ட தகவல். இது இணையதள பத்திரிகைகள் பலவற்றிலும் வெளியானது.

கமல் – விஷால்

 

இந்த பரபரப்பு ஓடிக்கொண்டிருந்த சூழலில், “ஆர்.கே. நகர் தொகுதியில் விஷால், போட்டியிடுவார் என்று பரவிய தகவல் தவறு” என்று அவரது தரப்பிலிருந்தே மறுப்பு வெளியானது.

மேலும், “விஷாலிடம் சில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மையே. ஆனால் ஆர்.கே. நகர் தொகுதியில்  போட்டியிடுவது குறித்து அவர் எந்தவித முடிவையுமே எடுக்கவில்லை. மேலும், விஷாலுக்கு நீண்ட நாட்களாகவே தனிக்கட்சி துவங்க வேண்டும் என்ற விருப்பம்தான் இருக்கிறது.

ஆனால் தற்போது நடிகர் சங்கச் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என பல பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். தவிர  தற்போது ‘இரும்புத்திரை’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி 2’ படப்பிடிப்பில் கவனம் செலுத்த இருருக்கிறார்” என்று விளக்கம் அளித்தது விஷால் தரப்பு.

இந்த விவகாரம் நடிகர் கமல்ஹாசனை எரிச்சல் படுத்தியிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“திரைப்பட தயாரிப்பு உட்பட எந்தவொரு விசயத்தில் ஈடுபட்டாலும் தெளிவான திட்டமிடலோடுதான் கமல் களம் இறங்குவார். படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றபிறகு வசனம் எழுதுவோர் திரைத்துறையில் உண்டு. ஆனால் கமலைப்பொறுத்தவரை முழு ஸ்கிரிப்டும் தயார் செய்த பிறகே படப்பிடிப்புக்குச் செல்வார். இறுதிவரை ஸ்கிரிப்டில் எந்தவித மாற்றமும் இருக்காது.

அதே போல படப்பிடிப்புக்குத் தேவையான அத்தனை விசயங்கள் குறித்தும் தனியாக ஒரு ஃபைல் வைத்து மெயிண்டெய்ன் செய்வார். (பிறகு கம்ப்யூட்டரில்.)

அதே போலத்தான் தனது அரசியல் கட்சி குறித்தும் தெளிவான திட்டமிடலோடு இருக்கிறார்.

அரசியல் கட்சி துவங்கவே சரியான கால அவகாசம் எடுத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் திடுமென ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் குறித்து அவர் ஏன் யோசிக்கப்போகிறார்?

தவிர, அவரது ரசிகர் மன்றத்தில் ஆரம்ப காலம் முதல் பல வருடங்களாக பொறுப்பில் இருப்பவர்கள் பலர் உண்டு. அவர்களிடமே, “தேர்தல் என்று வந்தால், உங்களைத்தான் வேட்பாளராக நிறுத்துவேன் என்று எதிர்பார்க்காதீர்கள். அது வேறு களம். அதற்குத் தகுதியானவர்களை நிறுத்தி அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவோம்” என்று சொல்லிவைத்திருக்கிறார் கமல். அதை அவரது ரசிகர் மன்றத்தினரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட மனநிலையில் உள்ள கமல், விஷாலை தனது சார்பாக தேர்தலில் களமிறக்குவாரா?

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு தனது ஆதரவை கமல் தெரிவித்தார் என்பது உண்மைதான். ஆனால் நடிகர் சங்கத் தேர்தலும், இந்த இடைத் தேர்தலும் ஒன்று என நினைக்கும் அளவுக்கு கமல் விபரம் தெரியாதவரா?

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதே விஷாலுக்கு தகுதி ஆகிவிடுமா?

தனிக்கட்சி துவங்கி தேர்தலை சந்திக்கும்போது, அந்தத் தொகுதி குறித்து நன்கு அறிந்த, எதிர்கால திட்டமிடல் உள்ளவர்களையே கமல் களமிறக்க எண்ணியிருக்கிறார்.

ஆர்.கே. நகர் தொகுதி குறித்து விஷாலுக்கு என்ன தெரியும்?” என்றெல்லாம் ஆதங்கத்துடன் தெரிவிக்கிறது கமலுக்கு நெருங்கிய வட்டாரம்.

சரி, ஆர்.கே.நகரில் விஷால் போட்டி என்று பரவிய தகவலுக்காக அவர் மீது கமல் ஏன் ஆத்திரப்பட வேண்டும்?

இந்தக் கேள்வியை கமலுக்கு நெருங்கிய தரப்பினரிடம் கேட்டோம். அவர்கள், “இப்படி ஓர் வதந்தியை பரப்பியதே விஷால் தரப்புதான் என்பதை கமல் அறிந்திருக்கிறார். விஷாலுக்கு நெருங்கிய முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர்தான், முகநூலில் இந்த வதந்தியை முதலில் பதிவிட்டார்.  இன்னொரு புறம், விஷாலுக்கு நெருக்கமான ஒருவர், “ஆர்கே நகரில் விஷால் போட்டி” என்று திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் பதிந்தார்.

அந்த வீடியோ

இந்த இரண்டு பதிவுகளும்தான், வதந்தி பரவ காரணம். இதையடுத்தே “கமல் சார்பாக விஷால் இறக்கவிடப்படுகிறார்” என்ற வதந்தியும் பரப்பப்பட்டது.

இதுதான் கமலை ஆத்திப்படுத்தியிருக்கிறது. அவர், “நான் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டு களத்தில் இறங்கியிருக்கிறேன். ஆனால் இந்த பையன் (விஷால்) நம் பெயரைக் கெடுத்துவிடுவான் போலிருக்கிறதே. அவருக்கு பப்ளிசிட்டி தேவை என்றால் ஏதாவது வதந்தியைப் பரப்பட்டும். அல்லது உண்மையிலேயே தேர்தலில் நிற்கட்டும். அதில் என் பெயரை ஏன் இழுக்க வேண்டும்” என்று நெருக்கமானவர்களிடம் கமல் வருத்தப்பட்டார்” என்கிறது அவரது நெருக்கமான வட்டாரம்.

விஷாலின் பப்ளிசிட்டி ஸ்டண்டுக்க சமீபத்தய உதாரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் விஷால் அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடந்தது. அடுத்த சில நாட்களில் சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ பரப்பப்பட்டது.

ஓர் அறை முழுக்க கட்டுக் கட்டாய் 2,000 ரூபாய் நோட்டுக்கள். ஒருபுறம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க, மறுபுறம் குவிந்து கிடக்கும் பணக் கட்டுக்களின் முன்னால் பதட்டத்துடன் நிற்கிறார் நடிகர் விஷால்.

“சார், இதெல்லாம் என் பணம்.., போங்க சார்..,  விட்ருங்க சார்” என்று விஷால் கெஞ்சுகிறார்.. ஆனால், பணக் குவியலைப் பார்த்து திகைத்துப் போன அதிகாரிகள், ”என்ன சார்.., எப்படி இவ்வளவு பணம் வந்துச்சு, கடன் வாங்கினதா சொல்றீங்க.., இவ்வளவு பணம் இருக்கிறதே..  இதுக்கு என்ன ஆதாரம்  சார்…” என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்கின்றனர்.

”எல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் சார்.., விடுங்க..” என்கிறார் விஷால்.

இதோடு அந்த வீடியோ முடிந்தது.

விஷாலை குறிவைத்து வருமானவரித்துறை ரெய்டு நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது பரபரப்பாக மக்கள் பார்த்தார்கள்.. பகிர்ந்தார்கள். இந்த வீடியோ வைரல் ஆனது.

அதன் பிறகு இதே வீடியோ, கூடுதல் காட்சியுடன் பரப்பப்பட்டது.

அந்த காட்சியில், குறிப்பிட்ட அறைக்குள் நுழையும் நடிகர் அர்ஜுன், “பணமா, உள்ளே, நல்லா பாருங்கய்யா.. அதனையும் வெள்ளைப் பேப்பர்.., ரெய்டுமில்ல ஒன்னுமில்ல.. ஷூட்டிங் டைம்லா கிளம்புங்க..” என்று சிரித்தபடியே சொல்லும் காட்சி இருந்தது.

அதாவது விஷால் நடிக்கும் ‘இரும்புத் திரை’ படத்தின் ஷூட்டிங்கிற்கு நடுவில் திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோதான் இது.

“தான் நடிக்கும் படத்துக்காக இப்படி சீப் பப்ளிசிட்டி தேடுகிறாரே விஷால்” என்று அப்போதே விமர்சனம் எழுந்தது.

“அதே போன்ற ஒரு ப்பளிசிட்டி ஸ்ட்டண்ட்தான், ஆர்.கே.நகரில் போட்டி தகவலும்” என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

இது குறித்து கமல் ஏதும் விளக்கம் தெரிவிப்பாரா என்றதற்கு, “இல்லாத செய்தியை.. அதாவது வதந்தியை பரப்பி, அதற்கு விளக்கமும் கேட்டால் கமல் எப்படி பதில் அளிப்பார்” என்கிறது அவருக்கு நெருங்கய வட்டாரம்.

விஷால் வட்டாரத்தில் இது குறித்து கேட்டபோது, “விஷால் பலவித வேலைகளில் பிஸியாக இருக்கிறார். ஆகவே அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது சொல்ல முடியாது. அதே நேரம் அவருக்கு அரசியல் ஆர்வம் உண்டு. ஆனால் கமல் உட்பட எவரையும் தனக்காக அழைக்கமாட்டார்” என்கிறார்கள்.

பார்ப்போம்.. விஷால் ஆர்.கே. நகரில் களம் இறங்குகிறாரா இல்லையா  என்று!