புதுடெல்லி: கடந்த மே மாதம் வோடஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள், 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும், அதேமாதம் ஜியோ 37 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட அறிக்கை.

இதுகுறித்து டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மே மாதத்தில் 56 லட்சமாக குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில், வயர்லெஸ் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மே இறுதியில் 629 மில்லியனிலிருந்து 620 ஆக குறைந்துள்ளது.

அதேநேரத்தில் கிராமப்புறங்களில் இது 520 மில்லியனிலிருந்து 523 ஆக உயர்ந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் 2.9 லட்சம் பேர் மொபைல் எண் மாற்றும் முறை மூலம் வேறு நிறுவனத்திற்கு மாறியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனம் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. ஜியோ 37 லட்சம் சந்தாதாரர்களை பெற்றுள்ளது. ஜியோவுக்கு அடுத்ததாக பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் 2 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக பெற்றிருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருகிறது.