ரேபரேலி: இந்த 2019 தேர்தலில், வாக்காளர்கள் தவறாக வழிநடத்தப்பட்டார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி.

உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது, “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் எவ்வாறு தவறாக வழிநடத்தப்பட்டார்கள் என்று நீங்கள் பார்த்தீர்கள் மற்றும் சிலர் அதைக் குறிப்பிட்டும் பேசினீர்கள்.

நாட்டில் தேர்தலுக்காக நடந்த விஷயம் நெறிமுறை சார்ந்ததா? அல்லது நெறிமுறைக்கு மீறியதா? என்பது நமக்கெல்லாம் தெரியும். ஆனால், அதிகாரத்தைப் பிடிக்க வேண்டுமென்ற ஒற்றை குறிக்கோளுக்காகவே எல்லாம் நடந்தது” என்றார்.

அதேசமயம், இவர் பேசும்போது பாரதீய ஜனதா கட்சியின் பெயரைக் குறிப்பிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. சோனியா காந்தியின் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.