கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு, காங்கிரஸ – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக அக்கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் கட்சி தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தங்களின் தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், தகுதி நீக்கத்தை உறுதி செய்ததோடு, தேர்தலில் போட்டியிட சபாநாயகர் அவர்களுக்கு விதித்த தடையையும் நீக்கியது.

இந்நிலையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இடைத்தேர்தலை முன்னிட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகள் மற்றும் பதட்டமான வாக்குச்சாவடிகள் கொண்ட பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.