டில்லி:

ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், அதை நிரப்பும்போது, பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற இந்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.

சிலிப்பர் கிளாஸ் வசதி உள்ள இருக்கைகளில் தற்போது பெண்கள், வயதானோர், கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெண்களிக்கு மேலும் வசதி செய்யும் வகையில், புதிய முறையை பின்பற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதில் காலியாக இருக்கும் இருக்கைகள் பாலினப் பாகுபாடின்றி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும். புதிய முறைப்படி இந்த இடங்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பெண் பயணிகளின்  பாதுகாப்பை கருத்தில்கொண்டு, காத்திருப்போர் பட்டியலில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், அதையடுத்தே மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.