சென்னை:

மிழக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  தாழ்த்தப் பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட வார்டு வரையறை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த லட்சுமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016ம் ஆண்டே முடிவடைந்ததை தொடர்ந்து,  உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால், இதில்  இடஒதுக்கீடு சரியான பின்பற்றப்படவில்லை என்று கூறி திமுக வழக்கு போட்டது. இதன் காரணமாக, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை  சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது. இதையடுத்து  உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணை காரணமாக உள்ளாட்சி தேர்தல் இழுத்தடிக்கப்பட்ட வந்து, சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து,  தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபடத்தொடங்கியது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்து உள்ளது.

அதன்படி, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு, அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஒதுக்கீடானது, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14 மாநகராட்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 14 மேயர் பதவிகளும் அடங்கும். இதேபோல், 122 நகராட்சிகளில் 3500-க்கும் மேற்பட்ட வார்டு கவுன்சிலர் பதவிகளும், 122 தலைவர் பதவிகளும் உள்ளன.

மேலும், 528 பேரூராட்சிகளில் 8,288 வார்டு கவுன்சிலர் பதிவுகளும், 528 தலைவர் பதவிகளும் இருக்கின்றன. 31 மாவட்ட ஊராட்சிகளில் 655 வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. 388 ஊராட்சி ஒன்றியங்களில் 6,471 கவுன்சிலர் பதவிகளும், 388 தலைவர் பதவிகளும் இருக்கின்றன. 12,524 ஊராட்சிகளில் 99,324 கவுன்சிலர் பதவிகளும், 12,524 தலைவர் பதவிகளும் உள்ளன.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 200 வார்டுகளில் ஆண்களுக்கு 95 வார்டுகளும், பெண்களுக்கு 105 வார்டுகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இதில் பொதுப்பிரிவினர், பொதுப்பிரிவு பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், அந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள் என பிரித்து வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.  பழங்குடியினருக்கு என்று வார்டுகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.

பதவிகள் அடிப்படையில், தாழ்த்தப்பட்டவர்கள் (பொது), தாழ்த்தப்பட்டவர்கள் (பெண்கள்), பழங்குடியினர் (பொது), பழங்குடியினர் (பெண்கள்), பெண்கள், பொது என்ற 6 வகையாக பிரித்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இதன்படி எந்தெந்த வார்டுகளில் யார்-யார் போட்டியிடலாம் என்பது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

இந்த நிலையில், சிவகங்கையைச் சேர்ந்த லட்சுமி என்பவர், உள்ளாட்சி தேர்தல் வார்டு வரைமுறையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சரியான முறையில் வார்டு ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,  தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவிட்டு உள்ளது.